ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2020

காற்று மண்டல நச்சுத் தன்மை அதிகமாக அதிகமாக எண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு மனிதன் பைத்தியமாகும் நிலை வந்து கொண்டுள்ளது - ஈஸ்வரபட்டர்

உயிரணுவாக உதித்திட்ட இவ்வுயிரணுக்களே… வளர்ச்சியின் வழி சக்தி நிலை கொண்ட உயிராத்மாவாக இந்த மனித உடல் பெற்று… எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து… ஆத்ம சக்தியை எண்ன சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்தது தான் ஆதியிலிருந்து வந்த நிலை.
 
அப்படி இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த “அந்த ஞானத்தின் வழித் தொடர் சக்தி நிலையே…” கிருஷ்ணாவாதர கால முதல் கொண்டு வளர்ச்சி நிலை குன்றி விட்டது.
 
நல் ஒழுக்கம் நல் ஞானம் சத்தியம் தர்மம் நியாயம் என்ற நற்சக்திகளின் வழித் தொடரில் சென்றிட இன்று இந்தக் கலியில் பிறபெய்தி வாழும் இந்த மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.
 
இந்தக் கலியில் மனிதர்களாக இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும்…
1.இக்கலிக்கு முற்பட்ட காலத்திலே வாழ்ந்தவரின் எண்ண சக்தியின் தொடர் நிலையில்
2.அதே வழியில் வந்திட்ட ஆத்மாக்களாக இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்
3.இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைச் செயலாக உள்ளது.
 
இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை... “இன்றைய இக்கலியின் பேராசை நிலை…!”
1.நாமாக இந்த நிலையை வளரவிடவில்லை…
2.வளர்ச்சியின் தொடர் நிலை தான் இந்நிலை.
 
ஒவ்வோர் உடலுக்குள்ளும் அந்த உடலுக்குகந்த ஆத்மா ஒன்று தான். ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் “மற்ற அணுக்களின் நிலை அதிகம்…”
 
தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இந்தப் பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.
 
தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள் பூச்சிகள் வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில்… நிலத்தில்… நீரில்… இப்பால்வெளி மண்டலத்தில்… மற்ற பிராணிகள்… பட்சிகள்… மனிதர்கள்… எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.
 
அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக் கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன.
 
ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல…
1.நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையில் எல்லாம்
2.பல உயிரணுக்களின் நிலை நம் உடலிலும் ஏறுகின்றது.
 
இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும் நம் சுவாசத்துடன்… நம் உடலுடன் ஏறுகின்றன.
 
நம் உயிராத்மாவும்… உயிரணுவாகத் தோன்றி பல நிலைகள் பெற்ற பிறகு இந்த மனித ஆத்மாவாக உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு இன்று வாழ்ந்திடும் நிலையில் உள்ளோம்.
 
ஆனாலும்…
1.இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும்
2.இன்றைய வாழ்க்கை நெறி முறையிலிருந்தும் தப்பி…
3.ஞான சக்தியின் வழித் தொடரை அறிய நம் எண்ணத்தையே கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய
4.இன்றைய இப்பிடிப்பிலிருந்து மீள்வது கடினம் தான்…!
 
இன்றுள்ள இந்த வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச் செயற்கையின் ஆசையினால் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையே சூனிய நிலை போல் சக்தி இழந்துவிடும்.
 
ஆக… செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத் தான் இக்கலியின் பிடிப்பில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.  
 
இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியிலிருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்களை ஒன்றுபடுத்தி விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினாலும் அணு ஆயுதங்களை அடிக்கடி வெடிப்பதினாலும் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி செயலற்றதாகி விட்டது.
 
அதனால் மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு… இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு… “சூனிய நிலை கொண்ட பைத்தியங்களாகத் தான் மனித ஆத்மாகளின் நிலையும் செயல்படப் போகின்றது…”
 
அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்த நிலை என்றால் இந்த மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?

1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்புபடுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி
3.இந்தக் கலியின் பிடிப்பிலிருந்து தப்புவது கடினம் தான்…!