ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2020

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

கல்வியில் சிறந்தவன் ஆனாலும் ஞானம் இல்லை என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.
 
ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவார்கள். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.
 
மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தை பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.
 
குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகள் வளர்த்துக் கொள்கின்றனர்.
 
அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ragging) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.
 
இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்
 
கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?
 
எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.
 
தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.
 
இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ர அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.
 
நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும்  நிலைகள் வருகின்றது.
 
அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.
 
ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.
 
தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக  பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.
 
ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.
 
கல்வி எதற்கு…?
 
1.ஞானம் இல்லை என்றால் கல்வியைக் காக்கும் நிலை இல்லை.
2.கல்வியால் ஞானம் வர முடியாது
3.ஞானத்தால் கல்வியின் நிலைகள் வளர்க்க முடியும்.

ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.