ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2020

இன்றுள்ளவர்களின் நிலை சாங்கிய சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாத நிலைகளாகத்தான் உள்ளது – நடந்த நிகழ்ச்சி

எம்முடன் (ஞானகுரு) 20 வருடம் பழகியவர்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் இங்கே வந்தால் (தபோவனம்) தீட்டு...! போகக் கூடாது...! என்று எண்ணுகின்றார்கள்.
 
1.இறந்த பின் இன்னொரு இடத்திற்குப் போகக் கூடாதா...?
2.கோயிலுக்குப் போகக் கூடாதா...?
3.கோயிலுக்குப் போகாமல் நல்ல நிலை பெறச் செய்வது எது...?
 
நல்ல நிலை பெறச் செய்வது தான் ஆலயம்...! அனைவரும் கூடி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவை ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும். இது தான் ஞானிகள் காட்டியது.
 
தீட்டு… தோஷம்… என்று சொல்லிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 48 நாட்கள் கழித்து இன்னொரு உடலுக்குள் போன பிற்பாடு தான் இங்கே வரப்போகின்றார்கள்.
 
இது எல்லாம் எந்த நல்ல நிலையைச் செய்தாலும் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை பெற்றாலும் யாம் சொன்ன நிலைகளை மறந்து விடுகின்றார்கள்.
 
இங்கிருந்து திருப்பதிக்குப் போனவுடனே உண்டியலில் காசு போடுகின்றோம் அல்லவா...? போகும் போது என் சார்பாக நீங்கள் என் காசையும் உண்டியலிலே போட்டு விடுங்கள்...! என்பார்கள்.
 
ஏனென்றால் இப்படித் தேடிக் கொண்டு வந்து போடச் சொன்னால் அதற்காக வேண்டி நமக்குச் “செல்வத்தைக் கொடுப்பான்…” என்ற நிலைகளில் அந்தப் பழக்கத்தில் தான் சிலர் உள்ளார்கள்.
 
அதே பழக்கத்தில் தான் இங்கே என்ன செய்கின்றார்கள்…?
 
“இறந்து விட்டார்…” என்று சாங்கியம் செய்து சாம்பலை எடுத்துக் கரைத்து விட்டு ஆற்றுக்குச் சென்று எல்லாரும் குளித்துவிட்டு மந்திரத்தைச் சொல்லி வீட்டிற்கு வந்து எண்ணெய் தேய்த்து முழுகி விட்டுச் சுற்றமும் உறவும் புத்தாடைகள் கொடுத்து அணிகின்றனர்.
 
பின் மாவிளக்கு செய்து நெய் தீபம் இட்டு விநாயகருக்குக் கொண்டு அர்ச்சனை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் பழக்கம் தான் உள்ளது.
 
1.இந்தப் பக்குவம் பெற்ற அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற்று
3.அவர் (இறந்தவர்) உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நேரடியாக விண் செலுத்த வரவில்லை.
 
ஏனென்றால் தீட்டு ஒட்டிகொள்கின்றது என்ற நிலைகளில் இருக்கின்றனர்.
 
இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு அந்த மெய் வழியைக் காணும் நிலைகளைத் தடைப்படுத்திடும் காலமாகத் தான் உள்ளது. இதிலிருந்து விடுபடும் காலம் எப்பொழுது வரப்போகின்றது...? என்று தெரியவில்லை.
 
ஏனென்றால் என்னுடன் (ஞானகுரு) நீண்ட நாள் பழக்கமான சித்தையைன் என்ற அன்பர் ஆன்மா திடீரென்று மறைந்து விட்டது. தகவல் கொடுத்தார்கள். தியானத்தின் மூலம் உந்தி மோட்சத்திற்கு அனுப்பி விட்டோம்.
 
பழனிச்சாமி இங்கே வருகின்றார். எல்லாம் இருக்கின்றது… ஆனால் மருமகன் இறந்து விட்டார்...! என்றால் உடனே அழுகை வருகின்றது.
 
ஏன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா..? என்றேன்.
 
“தீட்டு...! என்று சொல்கின்றார்கள்…” என்கிறார்.
 
நாம் அனைவரும் மோட்ச லோகம் போக வேண்டும்… நாம் அதற்காக மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத் தியானிக்க வேண்டும்…! என்ற நிலைகள் இல்லை.
 
செய்த பாவங்களை நீக்குவதற்காகச் சாங்கியங்கள் செய்யும் நிலைக்குத் தான் வருகின்றார்கள். இந்த உணர்வுகள் அடிப்பட்டால் மந்திரத்திற்குள் சிக்கி இன்னொருவனின் ஏவலுக்கு ஆளாகி ஆவியின் நிலையாகத் தான் இயக்க முடியுமே தவிர உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது.
 
நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இதைத் தெளிவாக்குகின்றோம்.
1.நாம் எதனின் வளர்ச்சியில் குரு காட்டிய வழியில் அருள் உணர்வைப் பெறுகின்றோமோ
2.அதன் வழியிலேயே தான் செல்ல வேண்டும்.
 
ஏனென்றால் இன்று விஷம் கொண்ட உலகில் வாழுகின்றோம். அதனை அகற்றிடும் நிலைகள் பெற வேண்டும்.
 
குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த ஆன்மாவை உந்தி விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வை… அந்த இருளை அகற்றிவிட்டால் “அவர் நினைவு வரும்போதெல்லாம்..” நமக்குள் வரும் நஞ்சினை மாற்றும் அரும் பெரும் சக்தியாக வரும்.
 
உடலை விட்டுப் பிரிந்தவர்கள் யாரையும் இனி நாம் இங்கே இந்தப் பூமிக்குள் இழுக்கக் கூடாது. அவர்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அந்த உடல் பெறும் உணர்வுகளை அங்கே கருக்க வேண்டுமே தவிர “சுட்ட சாம்பலை இங்கே கருக்கிவிட்டால் பாவம் போய்விடும்…” என்றால் அசாத்தியமான நிலைகள் கொண்டு நமக்குள் தவறின் வழிகளிலே நாம் பிழை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.
 
என்னிடம் சொன்னவுடனேயே அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் யாம் இணைத்து விட்டோம். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒரு ஈ கூட வரவில்லை. ஏனென்றால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம்...!
 
கோயிலுக்குள் போகக் கூடாது… போனால் பாவமாம்...! ஆனால் கோவிலுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…? கோவிலையே தூக்கிப் பேர்த்து எடுத்து விடுவார்களா...?
 
நல்ல ஒழுக்கம் கொண்டு நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்கு யாம் சொன்னாலும் இந்தத் தியான வழியில் என்னுடன் பழகி 20 வருட காலத்தில் அனுபவப்பட்ட குடும்பமே இந்த நிலையானால் இன்று வருவோர் என்ன நிலை ஆவார்கள்...?
 
1.அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையையும்
2.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் நிலையையும்
3.என்றுமே பிறவியில்லா நிலை பெற வேண்டும் என்றும்
4.நாம் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறோம்.
 
ஆனல் இவர்கள் வழிபடும் தெய்வம் தான் இவர்களைக் காப்பாற்றும் என்றால் அவர்கள் குடும்பத்தில் ஏன் சிக்கல் வருகின்றது...?
 
ஏனென்றால் இதைப் போன்ற நிலையில் ஒன்றை நாம் வளர்த்துக் கொண்டால்… “நான்…” என்ற நிலைகளில் மற்றவர்களை அடக்க வேண்டுமென்ற உணர்வுகள் அங்கே வரப்படும் பொழுதுதான் பகைமை என்ற உணர்வுகளாகின்றது.
 
அதனால் ஒருவருக்கொருவர் வேதனை என்ற உணர்வுகள் வந்து… கடும் நோயாகி மனிதனல்லாத உருவாக மாற்றும் நிலையே வருகின்ற்து.
 
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த மறைந்த நிலைகளைத் தான் மீண்டும் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
 
இன்று விஞ்ஞான உலகில் மனிதனுடைய உருவே முழுமையாக அழியும் தன்மையிலிருந்து மீண்டிடும் நிலையைப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்… கேட்பார் யாருமில்லை…!
 
ஏனென்றால் 20 வருடம் பழகியவர்களே இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால் அப்புறம் எப்படி இருக்கும்…? விடிய விடிய உட்கார்ந்து எல்லா உண்மைகளையும் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். நான் ஞானம் பெற்ற நிலை… வளர்ந்த நிலை…! என்று எல்லாமே சொல்லியிருக்கின்றேன். அவர்களே இந்த நிலையில் இருக்கின்றனர் என்றால் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கின்றது…?
 
ஏனென்றால் எல்லாரும் அருள் ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கின்றது. என் ஆசை என்றும் குறைந்ததில்லை…! எல்லாரும் பெற வேண்டுமென்ற ஆசையின் உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த அருள் ஒளியை நாம் பெறுகின்றோம்.
 
ஆனால் இப்படிச் சாங்கியத்தை செய்து பாவத்தைப் போக்கும் ஆசை இருந்தால் அவர்கள் அந்த வழியிலே போகட்டும்.
 
ஒவ்வொரு நொடிகளிலும் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் நிலையை எடுக்கின்றோமோ நம்மை அறியாது சில குறைகள் எடுத்தால் அருள் ஒளி பெற்று நம்மை நாம் திருத்தி கொள்ளப் பழகுதல் வேண்டும்.
 
பிறரின் குறைகளைப் பற்றிச் சொல்லும் போது தனக்குள் இருக்கும் குறை வருவதில்லை. குறைகளை உணர்ந்தாலும் குறையைத் தான் திருப்பி வளர்க்க முடிகின்றதே தவிர குறையை நீக்கும் மார்க்கம் இல்லை.

ஆகவே நம்மை அறியாது இயக்கும் இது போன்ற அறியாமையிலிருந்து மீள்தல் வேண்டும். அப்படி மீள்வதற்கே இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிப்பது…!