ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2020

வியாழனிலிருந்து தான் மனித உயிராத்மாக்கள் பூமிக்கு வந்தது - ஈஸ்வரபட்டர்

மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம் மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும்… பூமியின் சுழற்சி சக்தி அதிகப்படுவதாகவும் இந்த நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.
 
இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும்… ஓட்ட நிலையும்… இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலையெல்லாம் எந்த நிலையில் செயல்படும்…?
 
இன்றுள்ள மலைகளும் நீர்ன்நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன.
 
இப்பூமியில் இவ் அசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல்
1.தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்
3.இவ் இயற்கையிலிருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.
 
இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது…!
 
பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே அந்த உயிரணு அழிந்திடாது… பிம்ப நிலையில் மாறும்…! என்று உணர்த்தியுள்ளேன்.
 
அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்து பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து மற்ற மண்டலத்திற்கு மாறு கொண்ட சுவாச நிலையில் சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தி உள்ளேன்.
 
இக்கலி மாறிக் கல்கியில் சுவாச நிலை மாறு கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிராத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?!
 
இக்கேள்வியின் நிலை இந்த நிலையிலேயே இருந்திடட்டும்…
 
1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்த நிலையில் வந்திட்டது…?
2.நம் சந்திரனின் நிலையென்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?
 
நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம். ஆனால் வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்கள் இல்லை.
 
இன்றும் அங்கு உயிரணுக்கள் உண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பு நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு. ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மைவிட சக்தி கொண்ட வியாழனில் இல்லை.
 
ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலை பெறும் சக்தி வியாழனிலிருந்துதான் வந்தது…!
 
ஒரு கோடி… இரண்டு கோடி… நிலையில்லை… பல கோடி ஆண்டுகளுக்கு முன் நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம் தான் “வியாழன் மண்டலம்…”
 
இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணைகளைச் செலுத்துகின்றார்கள் அல்லவா…!
 
1.அந்த ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற மனித ஆத்மாக்களின் சுவாச நிலை
2.அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து
3.உயிரணுக்களாகத் தோன்றிடும் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.
 
இதே நிலை போன்றே…
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள்
2.நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால் நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர் நிலை கொண்டது.
 
வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால்… இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்த நிலை போன்றே
1.அன்று அங்கு ஏற்பட்ட பிரளயத்தினால்
2.நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.

வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப்போல் “சந்திரனின் நிலையும் கூடப் போகின்றது…!” (கூடிக் கொண்டிருக்கின்றது என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது)