ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2020

நம் பூமியில் ஏற்பட்ட முதல் இரண்டு பிரளயங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்த நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழனின் செல்லும் நிலையில் நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில் “வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர்ப்பார்வையில் பட்டது…”
 
அப்படிப் பட்டவுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்திகள் உறைந்து வேகமாய் “வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு…” இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறைந்தது.
 
வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
1.உப்புக் கலந்த உறைந்த அந்த அமில சக்தியானது
2.சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து நம் பூமிக்குள் வரத் தொடங்கியது.
 
பூமியில் எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்வுப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன் நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை (முதல் பிரளயம்) ஏற்பட்டது.
 
அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர் நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் “வட துருவ தென் துருவ நீர் நிலைகள். அடர்ந்த கடல்களாகப் பெருகியது…”
 
அதன் தொடர்ச்சியிலிருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர் நிலைகளுள்ள இடத்தில் நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.
 
அதன் தொடர்ச்சியிலிருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள் நீர்நிலைகளில் தோன்றி நீர் நிலைகளின் மேல் படர்ந்து வளர்ந்தது.
 
அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய சிறு வால் நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.
 
அந்தத் தொடரில் நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப்பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையிலிருந்துதான் பல நிலைகள் மாறியது.
 
பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு அடுத்த பிரளயம் ஏற்பட்டது.
 
1.முதல் வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை
2.அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு
3.அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில்தான்
4.மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.
 
இரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்த நிலை கொண்ட மாற்றம் வந்தது…? இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழன் தான் காரணம்…! வியாழனிலிருந்துதான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.
 
நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.
 
1.அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்தான்
2.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை…!
 
ஆனால் நம் பூமிக்கு வியாழனில் இருந்துதான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான் நம் உயிராத்மாக்கள் தோன்றி “இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது…”
 
இந்தக் கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்று விட்டன. மிருக உடலிலிருந்து மாறிக் கொசுவாகவும் ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்று விட்டன.
 
இம் மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்திதான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.
 
ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிராத்மாவும் பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது.
 
“எந்த உயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது…!” அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.
 
1.உண்டு… கழித்து… வாழ்ந்திடும்… உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்ப பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.