ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 23, 2020

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?


 
விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து பதிவாக்குகின்றார்கள் ஒரு கம்ப்யூட்டரில். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.
 
பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?
 
இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்த கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
 
1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.
 
இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்… என்று உணர்ந்து மனிதன் இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.
 
இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.
 
விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்... மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.
 
காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால நிலையில்…!
 
கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்த கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.
 
பின்… இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்த அன்று வாழ்ந்த அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.
 
இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாம் வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான்.
 
அதாவது… டி.வி. ரேடியோவில்…
1.எப்படி எந்த ஸ்டேஷன் வேண்டுமோ அந்த அலைவரிசையில் நாம் அதைத் திருப்பி வைக்கின்றோமோ
2.அதைப் போல் பதிவின் எண்ணமாக்கி நஞ்சை வென்றிடும் சக்திகளை நாம் நுகரும்படி வைத்தான் ஞானி.
 
ஆகவே காலை எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
 
ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் இந்த அணுக்கள் சேர்ந்திருக்கும். ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.
 
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.
 
ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.
 
இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.
 
அந்த இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்ற உண்மையை உணர முடியும்.

இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.