ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2020

உலகின் எப்பகுதியிலும்... எந்த நேரத்திலும்... எந்த நிலையிலும்... இனி எதுவும் நடக்கலாம்...!

நாம் நல்லதே செய்கின்றோம்...! சிறிது நோய் வந்துவிட்டால் நாம் என்ன செய்கின்றோம்...?
 
ஐயோ என் பிள்ளை இப்படி இருக்கின்றானே... உடம்பெல்லாம் வலிக்கின்றதே...! நான் நல்லது செய்தேனே ஆண்டவா... நீ என்னை இப்படிச் சோதிக்கின்றாயே...! அட தெய்வமே... இப்படிச் செய்கின்றாயே...!   பிள்ளையாரப்பா... நீ இப்படிச் செய்கின்றாயே... விநாயகா... கணபதி இப்படிச் செய்கின்றாயே...! வஜ்ர கணபதி..! உனக்கு எல்லாம் செய்தேனே உன்னை வணங்காத நாள் இல்லையே என்று இப்படிப் புலபுகின்றோம்.
 
அதாவது நல்ல பதார்த்தத்தை வைத்துச் சுவையாகச் செய்த பின் அதனுடன் விஷத்தைக் கலந்தே நாம் செய்கின்றோம்.
 
இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் இவை எல்லாம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்... அது மெய்...!
 
இதை எல்லாம் சாங்கியங்களாகக் காட்டப்பட்டு ஞானிகள்  கொடுத்த சாஸ்திரத்தையே மறைத்து விட்டு மனிதன் போகும் பாதையையே இருள் சூழச் செய்துவிட்டார்கள்.
 
விஞ்ஞான உலகில் இந்த பிரபஞ்சத்தின் நிலைகளிலே விஷத் தன்மைகள் கலந்து நம் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது...!
 
அணுவைப் பிளந்தான்... அணுக்கதிரியக்கங்களைப் பூமியில் பரப்பினான் பூமியின் ஈர்ப்பிற்குள் (நடு மையம்) வெப்பத் தணலாகக் கூடி கொதிகலனாக மாறும் நிலை அடைந்து விட்டது.
 
அதே சமயத்தில் பூமிக்கு வெளியே பிரபஞ்சத்திலும் இதைத் தூவினார்கள். சூரியனின் கதிர் அலைகள் வரும்போது இதே கதிரியக்கச் சக்திகளைத் தாங்கி மீண்டும் பூமிக்குள் வரப்படும்போது நஞ்சினை ஒடுக்கிடும் ஓசோன் திரையைப் பிளந்து விட்டது.
 
அதனால் நம் பூமி நஞ்சை வடிகட்டும் தன்மையை இழந்து மனிதனுடைய சிந்தனைகளையும் இழக்கச் செய்து கொண்டுள்ளது.
 
ஒரு விஷம் கொண்ட உயிரினம் நம்மைத் தீண்டினால் நல்ல நினைவை நாம் இழப்பது மனிதன் என்ற நிலையையே இழந்திடும்  நிலைகளில் வந்து கொண்டிருக்கின்றது.
 
விஞ்ஞான அறிவு அபரிதமாக வளர்ந்ததனால் மனிதன் என்ற சிந்தனையற்று இருள் சூழ்ந்த நிலைகளாகப் போய்க் கொண்டிருக்கின்றது இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
 
1.எப்பகுதியிலும்... எந்த நேரத்திலும்... எந்த நிலையிலும்... எதுவும் நடக்கலாம்.
2.ஏனென்றால் இன பேதம் மன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளில்
3.உலகம் எங்கும் பகைமை உணர்ச்சிகள் பரவிக் கொண்டிருக்கின்றது.
 
மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலைகளில் சிதறுண்டு இன்று தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற சிந்தனைகளை நாம் செலுத்த வேண்டும்.
 
அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் நமக்குள் நாம் பெருக்க வேண்டும். நமக்குள் விளைய வைத்த ஞானிகளின் உணர்வலைகளை காற்று மண்டலத்தில் பரப்பச் செய்து தீமையை விளைவிக்கும் அந்த நிலைகளைப் பிளக்க வேண்டும்.
 
நம் ஆன்மாவில் மட்டுமல்ல... இந்தப் பரமான பூமியில் இருக்கும் பரமாத்மாவில் உள்ள தீமைகளையும் பிளக்க வேண்டும்...!
 
அதைப் பிளக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும். அந்த மகரிஷியின் உணர்வின் சொல்லாக... செயலாக.. எல்லாவற்றையும் மாற்றுதல் வேண்டும்.
 
என்னவோ சாமி... (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல் நீங்களும் அந்தச் சக்திகளைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
 
மீண்டும் இதை எண்ணப்படும்போது இந்த ஞானமே உங்களைக் காக்கும். தீமை செய்தோரைப் பதிவு செய்து மீண்டும் அதை நினைவில் கொண்டு வரும்போது தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.
 
1.ஒருவன் தவறு செய்தான்... எதிர்த்துப் பேசிவிட்டான்...! என்றால் பழி தீர்க்கும் உணர்வுடனே நாம் செல்கின்றோம்.
2.அதே பழி தீர்க்கும் உணர்வு நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. 
 
ஆகவே உங்களுக்குள் வரும் இந்தத் தீமைகளை அகற்றிடும் நிலையாக ஞானிகளின் அருள் உணர்வுகளை இந்த உபதேசத்தின் வாயிலாகக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால் இதையே நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
இதைத் தான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஞானிகள் காட்டியுள்ளனர். ஆலயத்திற்குச் செல்லும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்ற இந்த முறைப்படி நீங்கள்  வணங்கிப் பாருங்கள்.

உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கி உங்களை ஞானியாக ஆக்கும்...! அதற்குத் தான் இந்த விநாயக தத்துவமே...!