ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2020

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.
 
இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.
 
அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.
 
துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.
 
அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே சுழன்று கொண்டுள்ளார்கள்.
 
அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.
 
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.
 
விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர். அதைத் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பார்கள்.
 
1.அந்தக் கூட்டமைப்புக்குள் மனிதனாகச் சென்றவர்கள் அனைத்தும்
2.சாதாரண கண்ணுக்குப் புலப்படாத அளவுகளுக்கு ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக
3.வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்…!