ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2020

உண்மையான ஞானமார்க்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து எப்பாதை சரியான பாதை என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல...!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.