ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2020

பல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா...?


விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புது புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்... கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்... கரடி போல் உள்ளது.  மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்...? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டி கடையில்  மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்... அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்...! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலா.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்...! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ... நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன் என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே... இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்...! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்...?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது...? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர...முற... நர...முற... என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா...? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்...
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்... உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்...?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட... ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து... அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.