ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2020

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?


செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது
2.செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.

செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது. அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.அந்த தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.