ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2020

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்ற பின் தொக்கியுள்ள விஷங்கள் கரைந்துவிடும்


ஒரு வால் நட்சத்திரத்திலிருந்து வந்த கற்கள் மற்ற எதிலேயும் பிடிப்பில்லாதபடி வரும்போது நம் சூரியன் இழுக்கின்றது.

நமது பூமி இடைமறிக்கப்படும்போது துருவப் பகுதியில் அதைக் கவர்ந்து நம் பூமிக்குள் கலந்து கொண்டபின் அந்தக் கற்கள் நமது பூமியில் காற்று மண்டல அழுத்தத்திற்குள் வந்தவுடனே சூடேறிக் கரைந்து விடுகின்றது.

அது கரையவில்லை என்றால்... அத்தனையும் அப்படியே விழுந்தால் இங்கே யார் ஒருத்தரும் இருக்க முடியாது. இதைப் போல் தினமும் எரி கற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.

நமது பூமியின் காற்று அழுத்தத்தில் வரும்போது கரைத்து விடுகின்றது. கரைக்கத் தவறிய சில பெரிய பாறைகள் எல்லாம் பூமியில் விழுகத்தான் செய்கின்றது. இத்தகைய நிலைகள் இருந்தால் நாம் யாரும் வாழ முடியாது

இதைப் போன்று தான்...
1.நமது உடலில் வெளியிலிருந்து வரும் தீமையான உணர்வின் தன்மைகளை
2.அது நமக்குள் ஈர்க்கும் சக்தி அடைவதை நீக்கிவிட்டால்
3.நமக்கு முன்னாடி வரும் இந்த தீமையின் அணுக்களை அந்த தீமையின் உணர்வுகளை
4.சூரியன் காலையில் அழைத்து மேலே கொண்டு செல்கின்றது.

ஆகையினால் தான் காலை துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்யப் பழகிக் கொள்ளச் சொல்கிறோம்.

வாழ்க்கையில் துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப்போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா...” என்று உயிரான ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று ஏங்குங்கள். அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து அந்தத் தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கிவிடும்.

குழம்பில் காரத்தைப் போடும்போது அது எப்படிச் சுவையாக மாறுகின்றதோ இதைப் போன்று சுவைமிக்க உணர்வாக அத்தகைய அணுக்கருக்கள் நம் உடலில் இந்திரலோகமாக மாறுகின்றது.

இப்படி அதை மாற்றப்படும்போது...
1.தீமையென்ற உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கத் தவறுவதினால்
2.உடலில் உள்ள அந்தத் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்கத் தவறுகின்றது.
3.உணவு கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடைந்துவிடும்
4.அது சோர்வடைவதோடு மட்டுமல்லாதபடி நம் உடலில் தீய அணுக்கள் உருவாகாதபடி அது செயலிழந்துவிடும்.

ஏனென்றால் “ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் அந்த உணர்வுகள்...” நிலத்திற்குள் எப்படி விஷ வித்துக்கள் பதிந்தபின் மழை வரும்போது வருகின்றதோ... இதைப்போல இந்த உடல் இருக்கும் வரையில். அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அணுக்களாக நமக்குள் பெருக்கி விட்டால் அது விளைந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு நாம் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் நம் உயிர் உடலில் விளைந்த உணர்வு கொண்டுதான் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

ஆகவே தீமையான ஊழ்வினை என்ற நிலைகள் உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளாக மாற்றி இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்
1.அந்த அணுக்களில் சேர்ந்த விஷத் தன்மையை
2.நாம் துருவ நட்சத்திரத்துடன் சேர்ந்த பின் தொக்கிய உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது.
3.அங்கே கரைத்தபின் விஷத் தன்மையைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.
4.அந்த ஒளியுடன் ஒன்றிய ஒளியின் அறிவாக அங்கே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் இணைகின்றோம்
5.துருவ நட்சத்திரம் விளைவிக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு
6.அதன் தன்மை கொண்டு நம் உயிரான்மா வளர்ச்சி அடைகின்றது.

ஒரு பிரபஞ்சம்... இந்தச் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதைப் போல் அமைப்பில் நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமோ வலுவடைகின்றது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிமயம் ஆகின்றது.

உலகில் உள்ள உணர்வுகளில் அந்த ஒளி அலைகள் பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு  ஒளிமயமாக மாற்றும் இந்த உணர்வின் தன்மை பெறப்படுகின்றது.  

ஆகவே நம் குருநாதர் காட்டிய இத்தகைய உண்மைகளை உணர்ந்த நிலையில்...
1.மனிதனான பின் இன்னொரு பிறவிக்குச் செல்ல விரும்பாதீர்கள்
2.இந்த உடலின் மீது பற்றை வைக்காதீர்கள்.

குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வுகள் தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று அதன் உணர்வை அதிகரியுங்கள்.

அதன் உணர்வுகள் நம் இந்திரலோகத்தில் பெருகும். அதன் உணர்வுகள் பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுத்துவிடும். அது சிறுத்திடும் நிலைகள் கொண்டு அருள் உணர்வுகள் பெருகப்படும் போது நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.