ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2020

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களின் (ஆவி) நிலைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு... அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்...
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ... அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை... அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்... வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்... இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி... ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச் சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன...?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்... அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்... அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தை காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன. 

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்... கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு... அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான் எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை... இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்... இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன...” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை...!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி... உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்... பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே...” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.

தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவறவிட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு...” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே... அதன் தொடராக
2.நாம் நம் நிலையைதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்...!