ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2020

இனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.

ஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.