ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2019

அஷ்டமி.. நவமி... அன்று சுப காரியங்கள் செய்யக் கூடாது என்றால் வேறு எதைச் செய்ய வேண்டும்...?


நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.

அந்த வினைச் செயலின் பதிவு நிலை எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் வான இயலின் தத்துவத்தை அறிந்து கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.

தனக்குப் பின் வந்த தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்...!”

இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி... நவமி...” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது...! என்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே... நவ ஜோதியின் தத்துவமப்பா...!”

ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா...!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது...! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை... அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான். 

இராசிகள் என்று கூறுகின்றோம். அதன் பொருள் என்ன...?

நாம் பார்க்கும் பால்வெளி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் சுழன்று ஓடுகிறது. அதைப் போல மற்ற சூரியக் குடும்பங்களும் அதிலே சுழல்கிறது. 2000, 1000 என்று குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

நம் சூரியக் குடும்பத்தின் ஓட்டத்தின் கதியில் நம் சூரியக் குடும்பத்தைப் போல் சுழலும் மற்ற குடும்பத்தின் சந்திப்பாக ஒன்றுடன் ஒன்று கலவையாகி அதிலே உயிரணுக்கள் உதித்திடும் தன்மையாக அத்தகைய குணங்களைப் 12 இராசிகள் என்று கூறினார்கள் ஞானிகள்.

பூமியில் பிறப்புக்கு வரும் உயிரணுக்கள் ஜீவாத்மாவாகி (உடல் பெற்று) தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில்
1.விண்ணின் ஆற்றல்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொண்டு
2.பரமாத்மாவாக ஆகும் தத்துவத்தில்
3.சுயப் பிரகாச ஜோதியாக ஆவதின் மூலமே நவஜோதி.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

தெய்வ குணத்தைப் பெறுவோம்... தெய்வ சக்திகளை வளர்ப்போம்.