ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2019

“மகரிஷிகளுடன் நாம் நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

1.சூட்சமத்தின் இயக்கத்தின் கதி….!
2.அனைத்துக் கோள்களின் தொடர்பிலும் சுழன்று கொண்டேயுள்ள நிலையில்
3.“நான் என்பது யார்…?” என்ற உண்மையை உணர்ந்தோமானால்
4.நம் உயிரையும் ஆன்மாவையும் இணையத் தக்க ஒளித் தன்மையின் தொடர்பை நாம் பெறலாம்.

உடல் என்ற ஜீவ காந்த சரீர இயக்கத்தின் துணை கொண்டு… ரிஷிகளின் தன்மை வளர்ந்ததைப் போன்று…
1.சரீர இயக்கத்தின் வாழ்க்கையை
2.ஆத்மாவின் இயக்க வாழ்க்கையாக உணரும் தன்மையால்
3.ஆத்மாவும் உயிரும்… இந்த உடலை இயக்கக்கூடிய… நம் எண்ணத்தை ஆளக்கூடிய ஆட்சியாக
4.தன்னைத் தான் உணரல் வேண்டும்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும்  மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.