ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2019

பிறப்பு இறப்பு என்ற ஓட்டத்தில் செல்லாமல் “நான் என்பது யார்...?” என்று மனிதன் பெற வேண்டிய ரிஷித் தன்மையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு... இறப்பு...! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்... எங்கே செல்ல வேண்டும்... ஏன்... எதற்காக.. எப்படி...? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்...!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய் எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)


இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்...!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்...!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது...
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது?

நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)

இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.

இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்... இராமர்...!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.

அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)

எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.

மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.