ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2019

தியானமிருந்தாலும் நல்லதை எண்ணி வேதனைப்படத்தான் தெரிகிறதே தவிர நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற்று நல்லதாக்க முடியும் என்ற எண்ணத்தை எடுக்கப் பழகவில்லை


வேதனைப்படுவோருக்கு நல்ல மனம் கொண்டு உதவி செய்தாலும் அவன் தவறு செய்யும் போது “இவனுக்குப் போய் நாம் உதவி செய்தோம் பார்..! என்று நாம் வேதனைப்படுகின்றோம்

ஏனென்றால் நாம் நல்லது செய்த உணர்வுகள் அங்கே இருக்கிறது. தவறான அவன் செயலைப் பார்க்கும் போது அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர நேர்கின்றது.

அந்தத் தவறான உணர்வுகளை நுகர்ந்து நாம் வேதனைப்படும் நிலை வரும் அது நம் நல்ல குணத்தின் தன்மை அடக்குகின்றது. அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையப்படும் பொழுது என்ன சொல்கிறோம்...?

நான் நல்லதைச் செய்தனே... அவன் இப்படிச் செய்கின்றானே..! நல்லதைச் செய்தேனே... இப்படிச் செய்கின்றானே...! என்று தான் சொல்வோம்.

அதே போல நம் பிள்ளைகளுக்கும் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். நம் சொன்னபடி கேட்காலம் அவன் செயலற்றவனாக மாறும்போது அவனை எண்ணும் போதெல்லாம் வேதனையின் தன்மையாக நமக்குள் உருமாற்றும்.

1.நமக்கு பிறந்த குழந்தைகள்தான் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும்
2.அவர்கள் செய்யும் தவறு வலிமையாகப்போகும் போது அதை நுகர்ந்து விடுகின்றோம்.
3.ஏனென்றால் முதலில் ஒன்றும் தெரியாது.

அது சிறுகச் சிறுகக் கலந்து அணுவின் தன்மையாக நம் உடலுக்குள் மாற்றப்படும் போது அவனை நினைத்தாலே அந்த வேதனை உணர்வுகள் அதிகமாகி விடும். அதனால் உடலுக்குள் உருவாகும் நோயிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பின் அவனுடைய உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்த பின் இந்த உடலை விட்டு நாம் செல்லப்படும் போது அவனுடைய ஈர்ப்புக்குத் தான் போவோம்.

அவனை எண்ணி அவன் உடலுக்குள் செல்கிறோம். அவனில் விளைந்த விஷத்தை நமக்குள் உருவாக்கி அங்கே போன பின் அவனைத் திருத்தும் வழி இல்லை.

1.அவனுக்குள் விளைந்ததை எடுத்து
2.நாம் தான் நம் நல்ல குணத்தை இழக்கின்றோம்...
3.இந்த உடலையும் இழக்கச் செய்கின்றது. நல்ல உணர்வையும் மாற்றச் செய்கிறது.

இப்படிச் செய்கிறானே...! இப்படிச் செய்கிறானே...! இப்படிச் செய்கிறானே...! என்ற நிலைகளில் பேய் மனம் ஆகிவிடுகிறது. இதைப் போன்ற நிலைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு.

“வீட்டுக்கு வீடு வாசற்படி...” என்பது போன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் இத்தகைய குணங்கள் கொண்ட குழந்தைகள் இருக்கும். அவர்கள் தவறு செய்யும் நிலைகள் நமக்குள் வரப்போகும் போது பேய் மனம் ஆகின்றது.

அவனை எப்படியும் வளர்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகிறது. அந்த எண்ணம் பாசக் கயிறாக மாறுகிறது.
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக
2.நம்முடைய எண்ணம் நம் உடலுக்குள் அது எமனாக... நோயாக மாறுகின்றது.

இதைத் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

நாம் பார்ப்பது நம் பையனை...! அது “சித்திரம்...” அவன் இப்படிச் செய்கிறான் என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் குழந்தையாக இருந்தாலும் அவன் செய்யும் தீமையின் உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக உருவாகி விடுகின்றது. அதாவது “புத்திரனாக” உருவாகிவிடும்.

அப்போது “அவன் இப்படி இருக்கின்றானே... அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ...?” என்று அடிக்கடி எண்ணி அதாவது பாசக்கயிறால் தொடரப்படும் போது அவனை எண்ணி எந்த வேதனைகள் பட்டமோ அது  நமக்குள் நோயாக விளையும்.

அப்போது இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என்பதையே சுத்தமாக மறந்து விடுறோம். ஒரு எருமை மாடு என்ன செய்யும்...? அதற்குச் சிந்தனை இல்லை. சுமக்கத் தெரியும். அடித்தால்  “ஆ...” என்று கத்தும். அந்த வலுவின் தன்மை தான் அதற்கு உண்டு.

ஆக அதைப் போன்ற உணர்வின் தன்மை நமக்குள் வரப் போகும் போது தான் எருமையை வாகனமாக வைத்து “எருமை மேலே எமன்...”  வருவதாகக் காட்டுகின்றார்கள். பையன் மேல் உள்ள பாசத்தால் சிந்தனை அல்லாது செயல்பட்ட உணர்வுகள் அது தொடர்ந்து “பாசக் கயிறாக” நம்மை வழிப்படுத்துகின்றது.  

சூட்சம நிலையில் நடப்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகிறார்கள் ஞானிகள்.

நாம் பார்த்த உணர்வின் தன்மை அது எந்தக் கணக்கோ அதன் வழி கொண்டு நாம் எண்ணிய எண்ணங்கள் பாசக் கயிறாக மாறி “நம்முடைய எண்ணமே எமனாக மாறுகிறது...”

வேதனையான ஆன பிற்பாடு பேய் மனம் கொண்டு யாரைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அவன் உடலுக்குள் சென்று இந்த விஷத்தைத் தான் வளர்க்கும். அவனையும் வாழ விடுவதில்லை. அவனையும் வீழ்த்திய பின் அடுத்து வெளி வந்து மனிதனல்லாத உயிரினமாகத்தான் பிறக்க முடியும்.

இதை எமன் தண்டனை கொடுக்கின்றான் என்ற நிலையில் எண்ணெயில் போட்டு வாட்டுகின்றான். தலை கீழாகக் கட்டித் தொங்க விடுகிறான் என்று உணர்த்துகின்றார்கள்.

நாம் நுகரும் செயலாக்கங்கள் நமக்குள் மறைமுகமாக எப்படி இயக்குகிறது என்று ஞானிகளால் காட்டப்படுகிறது. இதை நாம் யாருமே புரிந்து கொள்வதில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் காலையில் அந்தத் துருவ தியானம் எடுக்கப்படும் போது அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று எடுத்து வலுவாக்கி அந்த வேதனையின் உணர்வுகளை மாற்றப் பழக வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை ஒடுக்கியவன் அந்தத் துருவ மகரிஷி. குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே துருவ மகரிஷியின் உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை தவறு செய்தால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும். அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானத்து அந்த உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

இப்படி அருள் உணர்வை நமக்குள் படைத்து நல்ல அணுவின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். எண்ணத்தால் இங்கே எப்படிக் கரு உருவானதோ இதைப் போல அவனை வளர்க்கும் அருள் ஞான்த்தின் உணர்வை நமக்குள் எடுத்துக் கருவாக உருவாக்குதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் இருவருமே வேதனை என்ற உணர்வுகள் வராதபடி மகரிஷிகளின் ஒளி அலையாகச் சமைத்து அந்த எண்ணத்தைப் பாய்ச்சப்படும் போது அறியாத இருளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

இருளை நீக்கும் உணர்வுகள் அவனுக்குள் பாயும் பொழுது அவன் தெளிவாகின்றான். தெளிந்த நிலைகள் அடைகின்றான்.

தாய் கருவிலே வளரப்படும் போது சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளைத் தாய் உற்று நோக்க நேர்ந்தால் அந்தத் தீமையான உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகள் கருவிலே விளைந்து.. குழந்தை பிறந்த பின்.. “நாம் என்னதான் சொன்னாலும் விளைந்த உணர்வின் சக்தி அவனை அப்படித் தான் இயக்கும்...!” அதை மாற்ற வேண்டும் என்றால் இந்த வழிப்படி நாம் அவனை நிச்சயம் மாற்ற முடியும்.

1.களைகள் முளைத்து விட்டால் வயல்களில் அந்தக் களையை எப்படி உடனே நீக்குகின்றோமோ அதைப் போல
2.குறைகளைக் கண்டால் இந்த முறையைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.
3.சொல்லால் சொல்லி யாரையும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாக எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள்.