ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2019

பன்னிரெண்டு மாதங்களிலும் அருள் சக்தியைப் பெறச் செய்யும் நம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம்
3.தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

விஜயதசமி - நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

உதாரணமாக நாம் நுகரும் உணர்வுகள் தீமையின் உணர்வுகளானால் வினையாகி உடலுக்குள் ஒரு வித்தாகின்றது. தீமையான அந்த வித்தை உடலுக்குள் வளர விடாது தடுக்க வேண்டும் அல்லவா...! அதற்காக விநாயகர் சதுர்த்தி என்று கொடுக்கின்றார்கள்.

நல்ல குணங்கள் கொண்டு நல்ல உணர்வுகளை உடலில் விளைய வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது வினைக்கு நாயகனாகி விடுகின்றது.

நம் உடலில் உள்ள நல்லதைக் காப்பதற்காக வேண்டி தீமையான உணர்வுகளைக் களையை நீக்குவது போல் நீக்க வேண்டும். அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் போது நல்ல வித்திற்கு உரம் கிடைக்கின்றது. அப்பொழுது தீமைகளைக் கரைத்து விடுகின்றோம்.

நாம் நீக்கிய தீமையான உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து சூனிய மண்டலத்திற்குக் கொண்டு போகிறது. அப்புறம் கடல் அலைகளிலிலே கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அங்கே கரைத்துவிடும். உள்ளே இழுத்துக் கொள்கின்றது.

அதாவது பூமியில் முக்கால்வாசி நீர் இருக்கின்றது. பாக்கி கால் வாசி நிலப் பகுதியில் தான் நாம் இருக்கிறோம். தீமைகளை அங்கே நீரிலே கரைத்த பின் இங்கே நிலப் பகுதியில் வராது அது நிறுத்தி விடும். நாம் வாழும் இந்த உலகமும் தூய்மை ஆகின்றது.

தீபாவளி அன்றைக்கும் இதேதான். தீபாவளி என்றால் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்.

இப்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள். கண்கள் கொண்டு வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள். அடடா... இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே...! என்று பாசத்தால் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த வேதனையான உணர்வின் தன்மை வந்தவுடனே நமக்குள் அது நோயாக மாறுகிறது. அசுர குணங்கள் விளைகின்றது. அசுர அணுக்கள் விளைகின்றது. நல்ல குணங்களைக் கொல்கின்றது. நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

கண்ணன் நரகாசுரனைக் கொன்றான் என்ற நிலையில்
1.நம் கண்களின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று பல முறை
3.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

கணவனும் மனைவியும் இரண்டு பேரும் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும். அவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்

நம் வாடிக்கையாளர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொல்லி இருப்பார்கள். “உ..ம்” கொடுத்து அதைக் கேட்டிருப்போம். நமக்குள் அது பதிவாகிவிடும்.

அதை மாற்ற நாங்கள் தொழில் செய்யும் இடங்களெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். எல்லாக் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் நாம் எண்ணிப் பழக வேண்டும்.

ஆக மற்றவர்களுடைய துயரங்களை நாம் எண்ணுவதே இல்லை. அதிகாலையில் நான்கு மணிக்கு இப்படித் தியானித்தால் காலையில் ஆறு மணிக்கு சூரியனின் ஒளிக் கதிர்கள் வருகிறது.
1.நாம் இழுக்காத அந்தத் தீய வினைகளை எல்லாம்
2.அது இழுத்து மேலே சூனிய மண்டலத்திற்கே கொண்டு போய் விடுகிறது.

சிலர் தியானம் இருக்கிறோம் என்ற நிலையில் சூனிய மண்டலத்திற்கே போய் விடுகிறார்கள். எங்கே...? சிவன் இருண்ட உலகத்தில் இருக்கின்றான். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்ற நிலையில் சிவன் ராத்திரி என்று அறியாதபடி சொல்கிறார்கள்.

ஒருவருகொருவர் பகைமையான உணர்வு வந்தாலும் தீபாவளி அன்று நல்ல பதார்த்தங்களைக் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மலரைப் போல் மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ வேண்டும் என்று ஒற்றுமை ஏற்படுத்தும் நாளே தீப ஒளித் திருநாள்.

சிவன் ராத்திரி அன்றைக்கு “விழித்திரு…!” என்கிறார்கள். மகா சிவன் ராத்திரி அன்று சிவன் கோயிலில் போய் விடிய விடிய விழித்து இருக்கிறோம்.

தாயக்கட்டையையும் மற்றதையும் போட்டு விளையாடுகிறோம். விழித்திருக்க வேண்டு என்று சொல்லிக் கொண்டு “நான் ஜெயித்தேன்… நீ இல்லை நான் தான் ஜெயித்தேன்…!” என்று இதில் தான் நாட்டத்தைச் செலுத்துகின்றோமே தவிர “எதற்காக விழித்திருக்க வேண்டும்…?” என்பதை அறியவில்லை.

விழித்து இருக்கிறது என்றால் சும்மா விழித்திருப்பதல்ல…! அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர என்று எண்ண வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் நான் பழகினேனோ அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் வளம் பெருக வேண்டும். பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்லி “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று இதை எண்ண வேண்டும்.

அதாவது தீமைகளையும் அந்தப் பகைமை ஊட்டக்கூடிய எண்ணங்களும் நமக்குள் வராதபடி விழித்திருக்க வேண்டும்.

பகைமை வந்தால் எனக்கு இப்படிச் செய்தான்... அவன் உருப்படுவானா...? அவன் குடும்பம் கெட்டு போகவேண்டும்...! என்று சொல்கிறோம்,

அந்த உணர்வு நமக்குள் புகாதபடி தீமையை விளைவிக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்தப் பகைமை உணர்வுகளை அகற்றுவதற்காக நாம் விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பது.

ஏனென்றால் மனிதனுக்குள் சந்தர்ப்பத்தால் விளைய வைத்த வெறுப்பின் உணர்வுகள் அவர்கள் எண்ணும் போது இந்த சூரியனின் காந்த சக்தி எடுத்துக் காற்றிலே அலைகளாகப் பரப்ப் வைத்து விடுகிறது.

அப்போது நமக்குள் அணுவாகி விட்டால் சும்மா இருந்தாலும் போதும். அந்த உணர்ச்சிகள் தூண்டி சிறு மூளைக்கு அனுப்பும். உயிர் என்ன செய்யும்…? அது எடுத்து நமக்குள் உணர்த்தும். தீமை செய்யும் உணர்வுகளை நுகரச் செய்யும். உயிரில் பட்டவுடனே அந்த எண்ணம் வரும்.

1.“அவனைச் சும்மா விடுவதா…?” என்ற எண்ணம் வந்தால் அந்த அணு அதனுடைய உணர்வை இழுத்துவிடும்.
2.இது இழுத்தவுடனே நம் உடல் உறுப்புகளைக் கெடுக்கும்.
3.நாம் நினைக்கிறோம்… அவனை விடுவதா என்று…!
4.ஆனால் அந்த உணர்வு இரு நான் பார்க்கிறேன்…! என்று நம் நல்ல குணங்களை இங்கே கொல்லும். இதை மாற்ற வேண்டும்
5.அதற்காகத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சொல்கிறார்கள்

அதாவது தீமைகள் நமக்குள் புகாதவண்ணம் நம் உடலுக்குள் விளையாத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.