ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2019

அகஸ்தியனின் ஸ்டேசனைத் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள்… மெய் ஞானியாக மாறுவது மிகவும் எளிதானது…!


விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்தது என்றால் அது தாவர இனத்தில் விழுந்து புழுவாக உடல் பெறுகிறது. அப்படி உடலாகத் தோன்றியவுடனே முதலில் அதற்குக் கண் இருக்காது. கண் இல்லாத புழுவாகத்தான் இருக்கும்.

கண் இல்லை என்கிற பொழுது “பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றித் தோன்றித் தான் அதற்குக் கண் வர வேண்டும். ஆனால் இப்படிக் கண்ணில்லாத புழுவாகப் பிறந்தாலும்
1.கண்ணுள்ள மற்ற உயிரினங்கள் அதை உணவாகக் கொத்தித் தின்றால்
2.இந்த உணர்வின் தன்மை (கண்களின்) கலந்து
2.கண்ணுள்ள உயிரினமாக அது மிகவும் சீக்கிரம் வந்துவிடும்.

ஆனால் ஆரம்பத்திலே இந்த உயிரணுக்கள் வளர்ச்சி இல்லாத பொழுது “பார்க்க வேண்டும்... பார்க்க வேண்டும்...!” என்ற உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து உடலில் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி ஒளியின் கதிராக வருகின்றது,

இப்படிப்பட்ட உணர்வுகளை ஒளியின் கதிரைப் பல சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தான்…” கண்ணாக உருவாகின்றது. (ஆரம்பத்தில்)

ஆனால்
1.மனிதனின் மலத்தில் வெளிப்படும் உணர்வும் மற்ற உணர்வுகளும் சேர்ந்து உருவாகும் கொசுவிற்குக் கண் வந்துவிடுகின்றது.
2.சாக்கடையில் உருவாகும் புழுக்களுக்குக் கண் இருப்பதில்லை.
3.ஆனால் ஒரு குருவி அதைக் கொத்தித் தின்றால் அதற்குக் கண் வந்துவிடும்.
4.ஒரு எறும்பு அதைக் கடித்தது என்றால் இறந்த பின் எறும்பின் உடலுக்குள் அந்த உயிர் வந்து அதற்குக் கண் வந்துவிடும். மிகவும் சீக்கிரம் கண் வந்துவிடும்.

இறந்த மனித உடலைப் புதைத்து விட்டால் அதிலிருந்து பலவிதமான குணங்களுக்கொப்ப பலவிதமான அணுக்களும் வளரும். அது வெளியில் வந்த பிற்பாடு என்ன செய்கிறது...? அது கண் உள்ளதாகத் தான் உருவாகின்றது.

ஆனால் நம் மலத்திலேயே கண் இல்லாத புழுவைப் பார்க்கலாம். வெளியில் வந்த அந்தப் புழுவை மற்ற பட்சிகள் கொத்திச் சாப்பிட்டால் அதனுடைய உணர்வை எடுத்துக் கண்ணுள்ளதாக அடுத்துப் பிறக்கும். இப்பொழுது இருக்கக்கூடிய மாற்றங்கள் இது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

இன்று இந்தப் பூமி முழுவதும் மனிதனாக உருவாக்கிய பின்
1.மனிதனுக்குள் உருவாக்கிய உணர்வின் தன்மைகள் அனைத்தையும்
2.கருவாக உருவாகும் அணுவின் தன்மையாக
3.இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
(ஒரு சேமிப்புக் கிடங்கு போல்)

மனிதன் வேதனைப்படும் உணர்வுகளைப் பரப்பி வைத்திருந்தால் இன்னொரு மனிதன் வேதனைப்பட்டால் இந்த வேதனை அணுக்களை அங்கே இரையாக்கி சீக்கிரம் அந்த உணர்வின் தன்மை அவனையும் வேதனைப்பட வைக்கும்.

அதே போல மனிதனுக்குள் எத்தகைய நோய்கள் உருவானதோ இவனின்று வெளிப்பட்டது காற்று மண்டலத்தில் இந்த விஷத் தன்மை கொண்டதாகத் தான் இருக்கும். அந்த உணர்வுகளை இன்னொரு மனிதன் நுகர்ந்தான் என்றால் அவனையும் நோயாக்கும்,

1.இதைப் போன்ற நிலைகளை நீங்கள் அனைவரும் தெளிந்து கொள்ளுங்கள்..
2.தெரிந்து கொள்ளுங்கள்.
இதே காற்றிலே மெய் ஞானிகள் தீமையை நீக்கிய உணர்வுகளும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற உணர்வுகளும் அலைகளாகப் பரவி உள்ளது. சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அதைப் பதிவு செய்து… எப்படி அதைக் கவர வேண்டும் என்பதையும் உணர்த்தினார். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை மக்களை எப்படிப் பெறச் செய்ய வேண்டும் என்பதையும் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம். அந்த மெய் ஞானியான… “அகஸ்தியனின் ஸ்டேசனைப் பதிவாக்குகின்றோம்…!”
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழகிக் கொண்டாலே போதுமானது,

உங்களுக்குள் அது வளர்ச்சியாகும் பொழுது அந்த ஞானிகள் எதன் வழியில் தீமைகளை அகற்றினார்களோ மகிழ்ந்து எப்படி வாழ்ந்தார்களோ அதை நீங்களும் பெற முடியும்.

கண் இல்லாத புழு கண் உள்ள உயிரினத்தின் உணர்வுகளை நுகர்ந்து கண் உள்ள உயிரினமாக மாறுவது போல்
1.நாமும் மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து
2.மெய் ஞானியாக நிச்சயம் ஆக முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!