ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2019

தியானம் செய்வதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்


கேள்வி:-

தியானம் முடித்தவுடன் சில நேரங்களில் எனக்கு உடல் கூசுகிறது.
தியானம் செய்யாத நேரங்களில் கூட இனிப்பான உமிழ் நீர் சுரத்தல் அதிகமாக உள்ளது. ஏன்..?
எனக்கு குருவைத் தியானத்தில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதை அடைவது எவ்வாறு...?

பதில்:-

தியானத்தின் மூலம் நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் உயிரி வழியாக அதிகமாகப் பெற ஆரம்பித்தால் உடலுக்குள் நிறைய மாற்றங்களை உணர முடியும்.

அதிலே சிலவற்றைச் சொல்கிறேன். உடலின் சில பாகங்களில்
1.சுருக் சுருக் என்று குத்தும்
2.பட பட என்று தசைகளில் துடிக்கும் (கண்களும் துடிக்கும்)
3.சில நேரம் பளீர்...! என்று கூட மின்னும்
4.உடலுக்குள் திடீரென்று அதிக சூடாகும்
5.காதிலே சில நேரம் இரைச்சலாவது போன்றும் அடைப்பது போன்றும் உணரலாம்
6.தலையே பாரமாக இருப்பது போல் இருக்கும்
7.தலையின் பின் பகுதியில் “கின்” என்று இருக்கும்.
8.கண்களின் இமைகளில் எரிச்சல் இருக்கும் (கண்களும் சில நேரம் இலேசாகச் சிவப்பாக இருக்கும்)
9.உட்கார்ந்து தியானிக்கும் பொழுது தூக்கம் வரும்... ஆனால் படுத்தால் தூக்கம் போய்விடும்
10.உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும் (எவ்வளவு வெயில் வறட்சியாக இருந்தாலும்... தண்ணீரே குடிக்கவில்லை என்றாலும்)
11.புருவ மத்தியிலும் மூக்கின் நுனியிலும் அரிப்பு இருக்கும்
12.கனவுகள் அதிகம் தெரியும் (பகலில் தூங்கினாலும் வரும்)
13.உடலில் சில நேரம் மின்சாரம் பாய்வது போல் “கிர்” என்று இருக்கும்.
(1-13 எல்லாமே எனக்குள் நான் பார்த்திருக்கின்றேன்)

மேலே சொன்ன எல்லாமே அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு எடுக்கும் சக்திக்குத் தக்கவாறு எண்ணும் ஏக்கத்திற்குத் தக்கவாறு துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உயிர் வழியாக உடலுக்குள் செல்லும் பொழுது ஏற்படலாம்.

அது அது தெரியும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் பால் நினைவை விண்ணிலே செலுத்தி இதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அந்த விடைகள் கிடைக்கும். உணரவும் முடியும்.

குருவைக் காண வேண்டும் என்றால் குரு சொன்ன முறைப்படி நாம் கடைப்பிடித்து வாழ்க்கையை அருள் வழியில் நடத்த வேண்டும். கூட்டுத் தியானங்களில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் (இது மிகவும் முக்கியம்)

குருவின் உபதேசக் கருத்துக்களை ஆழமாகப் பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மற்றவர்களுக்கும் தக்க நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அது நமக்குள் ஓங்கி வளரும்.
2.நமக்குள் அது ஓங்கி வளரும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் நுண்ணிய உணர்வுகளை
3.அவர்கள் சுவாசித்துத் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்கத் தொடங்கினால்
4.நாம் நிச்சயம் அந்த இடத்தில் குருவைக் காண முடியும்
5.எல்லா மகரிஷிகளையும் காண முடியும்.

குருவையும் மகரிஷிகளையும் ஒவ்வொரு நொடியும்
1.காண வேண்டும் என்ற கண்ட நிலையிலும்
2.அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொண்ட நிலையிலும் தான்
3.ஞான குரு வெளிப்படுத்திய ஞானிகளின் உணர்வுகளை இங்கே பதிவு செய்து கொண்டுள்ளேன்.

எல்லோரும் பெறவேண்டும் என்று இங்கே பதிவு செய்யும் பொழுது தான் அவர்களை என்னால் காண முடிகின்றது. காட்சியாக அல்ல...! உணர்வாக... ஒளியாக... அலைத் தொடர்பாக... உணர்வின் இயக்கமாக... அவர்களுடன் அவர்களாக...!