ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2019

நாம் சுவாசிக்கும் காற்று (உணர்வுகள்) எப்படி உடலாக மாறுகின்றது – நம் உறுப்புகளின் இயக்கங்களை அது எப்படி மாற்றுகின்றது…?

நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே...!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டிவிட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.

சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப் பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.

இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.

நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.

அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.

உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது...?

ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.

அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட் புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.

அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப்போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது...?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது...?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது...? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை  நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.

சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா...? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்

யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம் என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.

ஏனென்றால் 4நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.