ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2013

வேடிக்கையாகப் பார்த்தாலும் நமக்குள் தீமைகள் புகுந்துவிடுகின்றது

1. நம் ரோட்டில் நடப்பதை வேடிக்கைதான் பார்க்கின்றோம்!
நமது வாழ்க்கையில் நாம் நல்லவர்கள்தான். எல்லோருக்கும் நன்மை செய்யவேண்டும் என்றுதான் எண்ணுகின்றோம், ஏங்குகின்றோம். ஆனால், ரோட்டில் ஒருவன் ஒருவனைத் தாக்குகின்றான். கோபத்துடன் அவன் கடுமையாகப் பேசுகின்றான், ஏசுகின்றான்.

நாம் வேடிக்கை பார்க்கின்றோம்.
நாம் உற்றுக் கண்ணால் பார்க்கின்றோம்.
நம் கருவிழி ருக்மணி நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற
ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிவிடுகின்றது.

இந்தப் பதிவின் நினைவுகள், அவன் உடலிலிருந்து வரக்கூடிய
கோபமான, காரமான உணர்ச்சிகளை நுகர நேருகின்றது.

ஆக, உயிரிலே பட்டு உணர முடிகின்றது. கண்ணிலே பார்க்க முடிகின்றது. இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. கோபத்தாலும், ஆத்திரத்தாலும் அவன் உடலில் எப்படி பதட்டங்கள் ஏற்பட்டதோ, அதே உணர்வுகள் நம் உடலுக்குள் உணர்ச்சிகளை அது இயக்கச் செய்துவிடுகின்றது.

இப்படி இயக்கினாலும், இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலக்கின்றது. சிறுகுடலும், பெருங்குடலும், நம் ஆகாரத்தை அமிலமாக மாற்றும் திறன் பெற்றது.

ஆகவே, ஆகாரத்திலே இந்த காரமான, வேதனையான உணர்வின் உமிழ்நீர் இரண்டும் கலக்கப்படும் பொழுது, சிறுகுடலையும், பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பலவீனமடைந்துவிடுகின்றது.
2. வேடிக்கை பார்த்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாக மாறுகின்றது?
நாம் இப்படி வேடிக்கை பார்ப்பதற்கு முன்பு, நிறைய சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இப்படி நமது சிறுகுடலையும், பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது, ஆகாரத்தை ஜீரணிக்காதபடி அதை நஞ்சாக மாற்றிவிடுகின்றது.

அதன் உணர்வு, நமது இரத்த நாளங்களில் கலந்தபின், கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது. பின், நம் இரத்த நாளங்களில் கலந்தபின், இரத்தங்கள் உடல் முழுவதும் படருகின்றது.

நுரையீரலிலோ, கல்லீரலிலோ, மண்ணீரலிலோ படரும் பொழுதும், இதயத்திலும் இந்த உணர்ச்சிகள் தாக்கப்படும் பொழுது, இதயத்தில் ஒரு விதமான வலியும், அதிலே ஒரு எரிச்சலும் வருகின்றது.

நாம் தப்பு செய்யவில்லை. வேடிக்கைதான் பார்த்தோம். நுகர்ந்தறிந்தோம். அறிந்தாலும் உணர முடிகின்றது. நுகர்ந்த உணர்வுகளோ, நமக்குள் அந்த உணர்வுகளைத் தூண்டும் அணுக்களாக மாற்றுகின்றது.

இப்படி மாறும் அணுக்களை நாம் தடுக்கவில்லையென்றால் நம் உடலுக்குள் சிறுகச்சிறுக ஆரம்பித்து
நெஞ்சுவலி, கல்லீரல் வலி, மண்ணீரல் வலி என்றும்,
கிட்னிக்குள் வலியும், இதயத்தில் வலியும், நுரையீரல் வலியும்,
இந்தக் கார உணர்ச்சிகளால் வந்துவிடுகின்றது.
இதன் உணர்வின் அழுத்தம் மூளை பாகம் சென்று,
நாம் சிந்திக்கும் பொழுது,
மூளையிலும் இந்த இரத்தங்கள் கார உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்பொழுது, நம் கண்கள் சிவந்து விடுகின்றது. அதாவது, சிரசு பாகங்கள் மிகக் கடினமாகி, “கின்” என்று ஆகிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால், அவர்கள் தவறு செய்வதை, வேடிக்கை பார்த்துத் தெரிந்து கொண்டோம்.
அந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
இதை நீக்க வேண்டுமா? வேண்டாமா?
அதற்குத்தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கச் செய்தால், ஒவ்வொரு நொடியிலும் இந்தக் கார உணர்வுகளைத் தணித்து, நல்ல உணர்வுகளாக மாற்ற முடியும்.