ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2013

தீமைகளைத் தடுக்க என்னால் முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு யாம் கொடுக்கும் உபாயம்

இப்பொழுது யாம் உபதேசிக்கும் பொழுது, இந்தத் தப்பைச் செய்யக்கூடாது என்று நினைப்போம். 

கடலிலே கொண்டுபோய் பெருங்காயத்தைக் கரைத்தால் என்ன செய்யும்?

1.கொஞ்ச நேரம் கமகம என்று இருக்கும்.
2.பின்பு கடலுக்குள் மறைந்துவிடும்.

யாம் உபதேசிக்கும் பொழுது அந்த உணர்வின் ஈர்ப்புகள் உழ்வினையாகப் பதிந்தாலும், இந்த மனம் உங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்கின்றது.

ஆனால், கடலிலே எப்படி பெருங்காயத்தின் நறுமணத்தைக் கரைத்து விடுகின்றதோ, அதைப் போல உங்கள் வாழ்க்கையில் இதற்கு முன் எடுத்துக் கொண்ட வெறுப்பு, கோபம், வேதனை என்ற உணர்வின் தன்மை அதிகமாகி, இதனின் உணர்வு கொண்டு உண்மையைப் புரிந்து கொள்ளாது, தடைப்படுத்தும் உணர்வு வந்துவிடுகின்றது.

தடைப்படுத்தும் உணர்வு வந்தபின், என்னால் முடியவில்லையே என்ற இந்த நிலைதான் வரும். 

அதை எப்படியும் முடிய வைக்கவேண்டும் என்று எண்ணத்தை வலுப்படுத்துவதற்குப் பதில்,
1.“இன்று திருத்திவிடலாம் என்று நினைத்தேன்,
2.என்னை விடமாட்டேன் என்கிறதே” என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள்.

அதற்குத்தான், யாம் திரும்பத் திரும்ப உபதேசித்து உங்களுக்குள் அந்த அருள்ஞானிகளின் ஆற்றலைப் பதிவாக்குகின்றோம். 

பதிந்த அந்த வித்திற்கு, அந்தச் சந்தர்ப்பத்தில் யாம் சொன்னதை நீங்கள் நினைவுபடுத்தி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று, சிறிது நேரம் ஏங்கியிருக்க வேண்டும்.

பின், அந்த  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள 
1.எல்லா அணுக்களிலும்,
2.எல்லா உணர்வுகளிலும்,
3.எல்லா எண்ணங்களிலும்,
4.எல்லா நினைவுகளிலும் படரவேண்டும் என்று
5.நம் உடலுக்குள் கலக்கச் செய்யவேண்டும்.
6.அப்படிக் கலக்கும் பொழுது தீமையான உணர்வுகள் பலவீனமடைகின்றது.
7.மன பலம் கிடைக்கும், சிந்திக்கும் திறன் வரும்.
8.இதை எப்படிச் செய்தால் சரியாகும்? என்ற தெளிவான எண்ணங்கள் தோன்றும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். எமது அருளாசிகள்.