ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2013

நல்ல குணங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரே சக்தி...!

1. யாம் சிறு வயதில் செய்த தவறு
எமது சிறு வயதில் செய்த தவறின் உணர்வுகள், எமது உடலில் உண்டு. சின்னஞ்சிறு வயதில், குருவியைக் கயிற்றில் கட்டி, எரியும் நெருப்பில் காண்பித்து, அக்குருவியை எரியச் செய்திருக்கின்றோம்.

குருவியைக் கொன்றாயல்லவா, அதனின் அணுக்கள் உனக்குள் இருக்கும். அதை அடக்குவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று குருநாதர் சொன்னார்.

சிறிய வயதில், அறியாது செய்த உணர்வுகள் என்றாலும்கூட, அந்த உயிரினங்கள் படும் வேதனையை இரசித்திருக்கின்றோம். ஆனால், அந்தக் குருவி அனுபவிக்கும் வேதனைகள் வரப்படும் பொழுது, இதெல்லாம் எங்கேயும் போகாது. ஆனால், அதனை உடனடியாகக் கொன்றிருந்தால் வேறு. 

சிறுகச் சிறுக வேதனை அடையச் செய்து, அதிலிருந்து வரும் வேதனையின் உணர்வை நுகரப்படும் பொழுது, வேதனைகள், நமக்கும் வந்துதான் தீரும்.

இதெல்லாம் எமக்குத் தெரியாது. எமது சிறு வயதில் நடந்ததையெல்லாம், குருநாதர் எனக்குச் சொல்லிக் காண்பித்தார்.

சிறு வயதாக இருந்தாலும் கூட, நாம் அறியாது தவறுகள் செய்தாலும்,  
நம்மிடத்தில் உள்ள காந்தம், அவ்வுணர்வுகளை ஈர்த்து,
நம்மிடத்தில் அணுவாக்கி விடுகின்றது. 

அணுவாகி விட்டால், அதன் தன்மையாக மாறும். இது போன்ற சில உணர்வுகள், நமக்குள் உணடு.  அதன் வளர்ச்சி வரப்படும் பொழுது, அந்த அணுக்களுக்குச் சாப்பாடு தேவை.

அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது, கண் வழி நுகர்கின்றோம். அந்த உணர்ச்சியால், நம்மை அறியாமலே,  தவறுகள் செய்யும் நிலை வரும்.
2. நாம் சிறு வயதில் செய்த தீமைகள், வளர்ந்தபின் அதன் வழியிலே நம்மை இயக்கிவிடும்
இப்பொழுது நல்ல மனிதர்களாக, பெரியவர்களாக இருப்பார்கள். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது, செய்த சேஷ்டைகளினால், பதிவான உணர்வுகள், இப்பொழுது, அது தன் உணர்ச்சிகளை அவர்களிடத்தில் உந்திக் கொண்டிருக்கும்.

இன்று பூமியில், விஷச் செடிகள் அதிகமாக வளர்கின்றன. மழை இல்லை என்றால், அவை பட்டுப்போகின்றன. மழை பெய்தால், அவைகள் துளிர்த்து விடுகின்றன.

நமது உடலும், ஒரு நிலத்தைப் போன்றதுதான். எதை உற்றுப் பார்க்கின்றோமோ, அது. ஊழ்வினைஎன்ற வித்தாக நம்மிடத்தில் பதிவாகின்றது.

பின், அதன் தொடராக, அதன் உணர்வை நுகர்ந்து உயிரிலே பட்டு அறியச் செய்து, இரத்தத்தில் கலந்து, அணுக்களாகின்றன. இப்படி மனிதரான நம்மிடத்தில், இதன் உணர்வுகள் அதிகமாக வளரும்.

ஆகையினால், இதன் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துச் சேர்த்துநம் உடலுக்குள் மகாபாரதப்போர் நடக்கத் தொடங்கிவிடுகின்றது.
பெரியவர்கள் சில பேர்,
என்னுடைய எண்ணம் அப்படிப் போகின்றது, இப்படிப் போகின்றது,  
தடுக்க முடியவில்லை என்று சொல்வார்கள்.

தடுக்கத் தெரிந்தவர்கள் தடுத்துக் கொள்கின்றார்கள். தடுக்க முடியாதவர்கள் அதில் சிக்குண்டு, தீய அணுக்களைத் தம்முள் வளர்த்துக் கொள்கின்றார்கள்.
3. நல்ல குணங்களைப் பாதுகாக்கும் ஒரே சக்தி துருவ நட்சத்திரம்
என்னால் முடியவில்லை. முயற்சி செய்கிறேன், ஆனாலும் முடியவில்லை என்று சொல்லுகின்றார்கள். ஆக, அந்த உணர்வின் அணுக்கள் தானாக வேலை செய்யும். அதை அடக்குவதற்கு ஒரே சக்தி, துருவ நட்சத்திரம்.

நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து,
தீமைகளை அடக்கத் தவறினால்
அந்தத் தீமை செய்யும் உணர்வுகள்
நம்முடைய நல்ல குணங்களை, நிச்சயம் அடக்கியே தீரும்.

ஆக, நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டும் ன்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் நுகர்ந்தே ஆகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நாம் நமக்குள் வலிமையாகச் சேர்த்து,  நமது ஆன்மாவைத் தூய்மையாக்க வேண்டும். ஆக, நாம் அடிக்கடி, நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வந்தால், அந்த உணர்வின் வலு நமக்கு சேரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் நமக்குள் முழுமை அடைந்தால், நாம் இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலையாக, இந்த உயிர் எப்படி ஒளியானதோ, இதைப் போன்று, நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை, ஒளியாக மாறுகின்றது, நாம் அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்.