ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2013

நம் ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் எப்படி வருகின்றது? தீமைகளை எப்படி அகற்றுவது?

1. நம்முடைய ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் புகும் வழி
உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு, உடலில் விளைந்த அந்த உணர்வுகளை,
அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது,
நம் காதின் புலனறிவுக்குள்
அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள்
நம்மை இயக்கச் செய்கின்றது.
இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி,
கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.
அப்பொழுது அது எந்தத் திசை என்று பார்க்கின்றது.

நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ, அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள், ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.

ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி,
X-Ray படம் எடுப்பது போல,
நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து, அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி, உணர்வின் தன்மையை ஊழ்வினையாக பதிவு செய்கின்றது.

அதே சமயம், கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது, அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும், உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.
அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால்
நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது.
அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.
2. நமது ஆன்மா என்பது என்ன?
நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.

இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது? எப்படி ஈர்க்கப்படுகின்றது? எப்படி வேலை செய்கின்றது அது மாதிரித்தான் நம் ஆன்மாவில் நாம் எண்ணிய, சுவாசித்த உணர்வலைகள்
பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று
நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

கண்கள் எலும்புக்குள் வேதனைப்பட்டவரைப் பதிவாக்கியபின், “மேக்னெட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு, நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.

நமக்குள் ஆன்மாவாக மாறியபின், நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்துவிடுகின்றது.

ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். ஆகவே, நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின், நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே, பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ, அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.
3. பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது
ஆனால், நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை, அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது, அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

நமது பூமி ஒரு பரம் அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக, பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.

ஆக, நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது, அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை, நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்து,
பராமாத்மாவில் இருப்பதை
நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4. நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது
கண் வழி பதிவு செய்த இந்த உணர்வுகள்தான் அதைக் கவர்ந்து நமக்குள் வினையாகப் பதிவு செய்கின்றது. அந்த வினைக்கு நாயகனாக, அதனின் உணர்வின் மணத்தை நாம் நுகர்ந்து, நமது ஆன்மாவிற்குள் “அவரின் வேதனையான உணர்வுகள்”, உரிமை கொண்டாட ஆரம்பித்துவிடுகின்றது.

ஆக, தெளிந்த மணம் கொண்ட நம் ஆன்மாவில்
அந்த நஞ்சான உணர்வுள் கலந்து கொண்டபின்,
நாம் சிந்திக்கும் செயல் இழந்து,
அந்தப் பாச உணர்வால் நமக்குள் தீய வினைகள் விளைந்து,
யார் வேதனைப்படுகின்றாரோ அவர்களுக்கு
நாம் வேதனையுடன் உபகாரம் செய்கின்றோம்.

உபகாரம் செய்தாலும், நம் நல்ல குணத்திற்குள் இந்த வேதனையான உணர்வுகள் கலந்துவிடுகின்றது. அதை நீக்க என்ன செய்ய வேண்டும்?
5. ஆன்மாவைச் சுத்தம் செய்யும் முறை
அன்று மெய்ஞானிகள், வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால், எப்படி செம்பும், பித்தளையும், வெள்ளியும், ஆவியாகச் செல்கின்றதோ, அதைப் போன்று நாம் ஆத்ம சுத்தி செய்து, நமக்குள் வரும் தீமைகளை நீக்க முடியும்.

நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்றுதான், அந்த உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும், செய்யவும் முடிந்தது.
ஆனால், அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின்,
அது இயக்கி, அந்த உணர்ச்சிகளை ஊட்டி
நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.

இந்த உணர்வின் சத்து நம் ஆன்மாவில் கலப்பதை அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால், அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்துவிடுகின்றது. அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.

“ஓம் ஈஸ்வராஎன்று நமது உயிரை புருவ மத்தியில் எண்ணி, 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்
அவரின் வேதனையான நஞ்சான உணர்வு சிறிதுதான் உள்ளே போகும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்என்று வலுக்கூட்ட வேண்டும்.

அவ்வாறு செய்யும்பொழுது,  நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வேதனையான நஞ்சான உணர்வினை அது தள்ளிவிடும், நமது ஆத்மா பரிசுத்தமாகின்றது,

நமது கையில் அழுக்கு பட்டது என்றால்,
நாம் கையைக் கழுவுகின்றோம். அதைப் போன்றுதான்,
நம் ஆன்மாவில் பட்டவுடன், சுத்தப்படுத்தவேண்டும்.

அப்படிச் சுத்தப்படுத்துவதற்குத்தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உணர்வுகள் உடலில் சக்திவாய்ந்ததாக ஆகும் பொழுது, தீமைகளை அகற்றுகின்றது

பின், வேதனைப்பட்டவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியை நுகர்ந்து, அவருக்குப் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து மகரிஷிகள் அருள் சக்தியால் நீங்கள் நலமடைவீர்கள் என்ற நல்ல வாக்கினை அங்கே பதிவு செய்ய வேண்டும்.

ஆக, அவருக்குள் விளைந்த தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. மாறாக, நாம் எடுக்கும் உயர்ந்த சக்தி நமக்குள் ஆற்றல்மிக்கதாக மாறி, மற்றவர்களையும் காத்திடும் சக்தியாக அங்கே செயல்படுகின்றது. இதுதான் நமது குருநாதர் காட்டிய மெய்வழி.