ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2013

மாரியம்மன் கோவிலில் அக்னிச் சட்டி ஏன் வைத்துள்ளார்கள்?

இன்று மாரியம்மன் கோவிலில் வெப்ப மரத்தை ஏன் வைத்திருக்கின்றார்கள்? நமது வாழ்க்கையில், அடுத்தவருடைய கஷ்டத்தைக் கேட்டுணரும் பொழுது, கேட்டவர்களின் உணர்வு நமக்குள் மாறி, அந்த உணர்வின் சக்தி நம்மை அறியாது நம்மை வேதனைப்படச் செய்து, கசப்பான வாழ்க்கையாகிவிடுகின்றது.

ஒரு விஷம் மற்ற பொருள்களில் பட்டவுடன் அனைத்தையும் நஞ்சாக எப்படி மாற்றுகின்றதோ, வாழ்க்கையில் கசப்பான உணர்வைக் கேட்டுணர்ந்தவர் நிலைகளிலும் மாறி, இவர்கள் வாழ்க்கையையும் கசப்பானதாக மாற்றிவிடுகின்றது.

எனவே தான் இங்கு அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்து,
அரசு ஓங்கி வளர
அதே சமயம் வேம்பைச் சிறுக்கச் செய்வதற்கும்
மாரியம்மன் கோவிலில் அக்னிச் சட்டியை வைத்துள்ளனர்.

மனித உடலில் கசப்பான உணர்வுகள் அது வெளிப்பட்டபின், அதைக் கேட்டு உணர்ந்தபின் கேட்டவர்களின் உடலில் அது உடலாக மாறி (மாரி) அந்தக் கசப்பின் வாழ்க்கை, கசப்பான உணர்வு உடலில் வந்துவிடுகின்றது, இதுதான் மாரியம்மா.

மாரியம்மன் கோவிலில் போய், “என் கஷ்டத்தையெல்லாம் போக்குவாய் மாரியம்மா” என்று அக்னி குண்டம் ஏந்தினால், மாரியம்மாள் உதவுவாள் என்ற எண்ணத்தைத்தான் உருவாக்கியுள்ளனர்.
                     
தன் வாழ்க்கையில் கசப்பான நிலைகளை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் அந்த மெய்ஞானி. அவன் விண்ணின் ஆற்றலைப் பெற்று, கசப்பான உணர்வைப் பொசுக்கியவன்.

அரச மரத்தைப் போன்று, ஓங்கி வளர்ந்த உணர்வின் தன்மையை விண்ணை நோக்கி எண்ணும் பொழுதுதான் அக்னி குண்டம்.
நம் நினைவின் எண்ணத்தை விண்ணை நோக்கிச் செலுத்தி,
அந்த மெய்ஞானிகள் உணர்வின் எண்ண அலைகளுக்குள்,
அந்தக் குண்டத்திற்குள்,
சப்தரிஷி மண்டலத்திற்குள் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தி, அந்த ஆற்றல்மிக்க அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்ற சுவாசத்தை, இந்த மனித உடலாகிய சிறு குண்டத்திற்குள் செலுத்தி, நமக்குள் மாறி வந்த சர்வ தீய வினைகளையும் பொசுக்க வேண்டும் என்பதற்குத்தான், மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர்.

அதாவது, சூட்சம நிலைகளில் நடப்பதை உருவ நிலைகளில் காட்டி, அந்த உணர்வின் எண்ணத்தைச் சூட்சமமாக்கி, அந்த உணர்வின் சக்தியை சூட்சம நிலைகளில் தனக்குள் எடுத்து, “உன் உடலாக்கு” என்ற இந்தத் தத்துவத்தை, ஆதிசங்கரரும் உணர்த்திச் சென்றார்.

ஆகவே, நாம் அனைவரும் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்கள் வெளி வரும் ஆற்றல் மிக்க சக்திகளை நம் உடலான குண்டத்திற்குள் செலுத்துவோம். தீமைகளிலிருந்து விடுபடுவோம்.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து,
என்றென்றும் மகிழ்ந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.