ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2013

குழந்தையைக் காத்துவிடுகின்றோம். நம்மைக் காக்கின்றோமா?

இப்பொழுது நாம் தேளைப் பார்த்தவுடனே அது நம்மைக் கொட்டவில்லை என்றாலும், கொட்டினால் விஷம் என்று அறிந்திருக்கின்றோம். தேளைப் பார்த்தவுடனே நமக்குள் பயமும், அது கொட்டிவிடுமே என்ற உணர்வை நாம் சுவாசித்து, அதனிடமிருந்து விலகிச் செல்ல விரும்புகின்றோம்.

அதனிடமிருந்து காத்துக் கொண்டாலும், இந்த உணர்வின் நஞ்சான பயம் கொண்டு, “தேள் நம்மைக் கொட்டிவிட்டால் வேதனைப்படுவோம்” என்ற உணர்வைக் கலந்து, நமக்குள் எண்ணமாகும் பொழுது ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது இது தேள் என்று தெரியாது. நெருப்பு என்றும் தெரியாது. தீ எரியும் பொழுது சுடராக எரியும் பொழுது அதனுடைய எரியும் அழகைப் பார்த்து, குழந்தைக்கு ஒன்றும் தெரியாததனால், சீறிப்பாய்ந்து நெருப்பைத் தொட முயற்சிக்கின்றது.

இதனைக் கண்டு நாம், “நெருப்பிற்குள் குழந்தை கையை விட்டால், கருகிவிடுமே” என்ற பய உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது. ஆனால், குழந்தையைக் காத்திட, உணர்வின் வேகத் துடிப்பால் பய உணர்வும் வேதனையும் நமக்குள் சேர்ப்பித்துக் கொண்டபின், உணர்வுகளில் ஊழ்வினையாகி அதனைக் கொண்டு எண்ணுகின்றோம்.

ஆக ஒவ்வொரு நொடியிலும் “குழந்தை விழுந்துவிடுவானோ” என்ற எண்ணங்ககளைத் தூண்டி, காக்கும் உணர்வாற்றல் வந்து குழந்தையைக் காக்கின்றோம்.

அப்படிக் காத்திட்டாலும், அந்த உணர்வுகள் நமது உடலுக்குள் வேதனையாக உருவாகி, நல்ல உணர்வின் தன்மை காத்திட உதவினாலும்,
கடுகடுத்த வேதனைகள் நமக்குள் உருவாகி,
அந்த நஞ்சு கொண்ட நிலைகள்
நமக்குள் எண்ணங்களாக உறைந்துவிடுகின்றது.
அடுத்து பெரியவனாக ஆக, ஆக, அவனைச் சீறிப் பாய்வதும், கடுகடுப்பாகப் பேசுவதும் இந்த உணர்வுகள் தூண்டுவதைப் பார்க்கலாம்.

நெருப்பிடமிருந்து குழந்தையை இளம்பருவத்தில் காத்திருந்தால், அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து, அவனைக் காக்கும் பொழுது கடுகடுப்பாகவும், எரிச்சலூட்டும் பேச்சும், எரிச்சலான நிலைகளும் வரும்.

இதை அந்தத் தாய் எடுத்திருந்தால், காலிலே எரிச்சல், உடலிலே எரிச்சல், உள்ளங்கையிலே எரிச்சலைப் பார்க்கலாம்.

அதைப் போல ஒரு தேளையோ, பாம்பையோ, குழந்தை தான் அறியாதபடி அதைத் தொட நேர்ந்தால், குழந்தையை வளர்க்கும் தாய் அந்த விஷத்தைக் கண்டு அலறியது போல, அந்த உணர்வைத் தனக்குள் எடுத்து, இந்தக் குழந்தைமேல் பாய்ச்சிய உணர்வுகள் தீய வினைகளாகச் சேர்கின்றது. அந்த வினைக்கு நாயகனாக உங்கள் செயலை மாற்றுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து, தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் வேண்டும்  ன்பதற்காகத்தான்  இதைச் சொல்கின்றோம்.