ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2013

அபிஷேகம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்? எப்படிச் செய்ய வேண்டும்?

1. கோவில்களில் செய்யும் அபிஷேகம்
இன்று நாம் சிலைகளுக்கு பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்கின்றோம். அந்தச் சிலை, நமக்கு நல்லது செய்யும் என்று நினைக்கின்றோம்.

துவைதம் என்றால், உருவப் பொருளை வணங்கி அருவப் பொருளைப் பெறமுடியும் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். இன்று உருவப் பொருளை வணங்கி,
அருபம் எப்படிக் கிடைக்கின்றது?
என்று யாரும் சொல்வதில்லை.

இன்று தெய்வச் சிலைக்குமுன் படைத்திருக்கும் மலரோ மற்ற மலரின் தன்மையோ, அங்கு உணவாகப் படைத்திருக்கும் பொருளோ நறுமணங்களைப் பரப்பச் செய்யும்.

அப்படிப்பட்ட அந்த உணர்வின் சத்துக்களை அங்கே படைத்து, சிலைக்கு அபிஷேகிக்கச் செய்து, அதன் உணர்வின் நிலைகளை நாம் பருகக் காட்டுகின்றார்கள். அபிஷேகம் செய்யும் பொழுது, நம்மைக் கண்ணாரப் பார்க்கச் செய்கின்றார்கள். நாம் அதைப் பார்க்கும் பொழுது என்ன செய்யவேண்டும்?
2. அபிஷேகம் செய்ய வேண்டிய நெறி
அந்தச் சந்தனைத்தைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கினால், அந்த உணர்வின் அலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகும்.

அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நம் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.

பன்னீரைப் போன்ற அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நமது உயிருக்கு நறுமணம் கிடைக்கின்றது.

அங்கே கனிகள் படைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும் பொழுது, அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.

ஆக, அங்கே காணும் பொருள்கள் அனைத்தும் துவைதம். அந்தப் பொருள்களுக்குள் மறைந்துள்ள சத்து அனைத்தும் அத்வைதம்.

சூட்சம நிலைகளிலிருந்துதான் நாம் இந்த உடலைப் பெற்றிருக்கின்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையினை அறிகின்றோம். அதனையே நுகர்கின்றபொழுது, அந்த மணத்தை அறிகின்றோம்.

அந்த மணத்தைச் சுவாசித்தாலும், இந்த உடலான நிலைகள் கொண்டு சுவையின் தன்மை வருகின்றது. உடலான சிவனுக்கு சுவைமிக்க உணர்வுகள் சேருகின்றது. அந்த மணத்தின் தன்மை உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.
ஆக, கண்களிலே பார்ப்பது துவைதம் என்றாலும், அத்வைதம் தான் என்று காட்டுகின்றார் ஆதிசங்கரர். அதாவது,
சூட்சம நிலைகள் பெற்றதை
உடலாக நீ எவ்வாறு ஆக்கவேண்டும் என்று
தெளிவாகக் கூறியுள்ளார்.

நீ தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், கனி அபிஷேகம் இவைகளை அந்தச் சிலைக்குச் செய்வதினால் ஒரு பலனும் தராது. ஆனால்,
அங்கே காட்டும் பொருளை நீ கண்டுணர்ந்து,
அதை எண்ணத்தால் (“சூட்சமத்தால்”) நுகர்ந்து
உன் உடலுக்குள் செலுத்தும் பொழுது,
அந்த உணர்வின் அலையாக உயிர் இயங்குகின்றது.
அங்கே உன் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
உணர்வின் சத்து, உடலான சிவத்திற்கு அமுதாகச் சேருகின்றது.

இப்படி, உன் உடலுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் செயலை உன் உணர்வாக நீ ஆக்கவேண்டும். அந்த மகிழ்ச்சியூட்டும் தன்மை உன் உடலாக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை உருவாக்கும் என்று உணர்த்தினார் ஆதிசங்கரர்.
3. ஞானிகள் அபிஷேகம் செய்யச் சொன்னதின் உட் பொருள் என்ன?
ஏனென்றால், அன்றைய நிலைகளில் சாதாரண மக்களுக்குக் இந்த ஆற்றல் கிடைக்க, கல்வியறிவு இல்லை. மகரிஷிகள் தான் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை அது காவியமாக எடுத்து, பொருளின் உருவத்தைக் காட்டி, சூட்சமத்தில் இயங்கும் நிலையை உணர்த்தினார்கள்.

அதாவது, உயர்ந்த குணங்களை நற்பணிகளைச் செய்யும் நிலையிலும், நல்லதை உருவாக்கும் நிலையிலும் கெட்டதை நீக்கும் நிலையிலும், இவைகள் அனைத்தும் சூட்சம மணத்துக்குள் அடங்கியிருக்கின்றது.

தாவர இனத்தின் உணர்வுகள் ஐந்தாலும், மனித உடலுக்குள் புகுந்து பல கோடிச் சரீரங்களில் விளைந்த தீய செயல்களை நீக்கி, அந்த உணர்வின் ஆற்றலாகத் தனக்குள் வளர்த்துக் கொண்ட இந்த நிலையைக் காட்டுவதற்குத்தான்,
அந்த அருள் மணங்களைத் துவைதமாக்கு,
துவைதம் என்றால் உன் உடலாக்கு.

உன் உடலுக்குள் இந்த நிலையைச் செயலாக்குவாய் என்றால், அதுவே தெய்வமாகி, அதனின் நிலையை உனக்குள் உருவாக்கும் செயலாக அது நிற்கும் என்றுதான் உணர்த்தியுள்ளார்கள் அந்த மகரிஷிகள்.


ஆக, சாதாரண பாமர மக்களும் கண்ணுற்றுப் பார்த்தவுடன் உயர்ந்த ஆற்றல்களைப் பெற்று, மனிதன் அடுத்து தெய்வ நிலையைப் பெறும் நெறிகளைக் காட்டிச் சென்றுள்ளார்கள்.