ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2024

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்

அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தால் தான் யாம் கொடுக்கக்கூடிய வாக்குகள் உங்களுக்குள் நல்ல முறையில் வேலை செய்யும்.

காரணம்…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுகளைத் தூண்டி
2.அந்த ஏக்க உணர்வுகளின் அடிப்படையில் தான் பதிவு செய்கின்றேன்.

அதே சமயத்தில் எப்போதுமே அன்னை தந்தையரை வணங்கிப் பழகுங்கள். அவர்களுடைய அருளாசியால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இது மிகவும் முக்கியம்.

யாம் கொடுக்கும் இந்த உபதேச வாக்குகளைச் சீராக உற்று நோக்கி அதைப் பதிவு செய்தால் ஞான வித்தாக வளர்ந்து
1.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.ஆத்ம சக்தி செய்யும் போது அந்த நேரத்தில் உடனுக்குடன் சிரமங்களைப் போக்க அது வழிகாட்டும்

ஆக… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உணர்வுகள் உடலைத் தனக்குள் அணைத்துக் காட்டும். எண்ணிய உணர்வின் ஞானமாக உணர்த்தும்.

அதன் வழியில் உங்களைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகையினால் யாம் உபதேசிக்கும் பொழுது கூர்ந்து கவனித்து இந்த வாக்குகள் பதிவாக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் இருங்கள்.
1.எந்த நல்லது பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வந்தீர்களோ
2.நல்ல முறையில் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் உடலில் அறியாது வந்த நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இப்பொழுது கிடைக்கும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போர் எல்லாம் நலம்பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் சொல்லிலே இனிமை பெற்று என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
12.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
13.பல உயர்ந்த உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்
14.உங்கள் உடலை எத்தகைய பிணிகள் இருந்தாலும் நீங்கும்… வலியோ வேதனையோ இருந்தால் குறையும்
15.தீமைகள் உங்களை விட்டு அகலும்… உங்கள் உணர்வுகளால் அறிய முடியும்.

ஆகவே யாம் கொடுக்கும் இந்த (மகரிஷிகள்) அருள் வாக்குகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவு கொண்டால் நீங்கள் ஏங்கும் போதெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீங்கள் சொல்லிப் பாருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள்

பாலோ தண்ணீரோ அல்லது பதார்த்தங்களையோ வைத்து இவ்வாறு ஜெபித்து அதற்கு அப்புறம் அதை எடுத்து உட்கொண்டு வாருங்கள். நல் மருந்தாக அமையும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.