ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2024

“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்

மனிதனின் வாழ்க்கையில் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்து வரும் நஞ்சினை ஆறாவது அறிவு பெற்ற இந்த மனித உடல் மலமாக மாற்றி விடுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மையால் “இயக்கும் சக்தி” நமக்குக் கிடைக்கின்றது. அதாவது நஞ்சு கொண்ட உணர்வினை நீக்கித் தெளிந்த உணர்வு கொண்டு விளைந்திட்ட அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை அகற்ற வேண்டும்.

அதை அகற்றவில்லை என்றால் நஞ்சு கலந்து… பின் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.

உடலில் அழுக்குப் பட்டால் குளிக்கின்றோம். வேலை செய்யும் போது கையில் அழுக்குப் பட்டால் சுத்தப்படுத்தி அதற்குப் பின் உணவை உட்கொள்கிறோம்.

நாம் அணியும் ஆடைகளில் அழுக்கு அதிகரித்து விட்டால் சோப்பைப் போட்டு நுரையேற்றித் துணியுடன் இரண்டறக் கலந்த அழுக்கினைப் போக்குகின்றோம். மனிதனின் ஆறாவது அறிவினுடைய செயல்கள் தான் இது எல்லாம்.

ஆனால் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள்…?

1.அன்றைய மகரிஷிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி
2.”சக்தி வாய்ந்த உணர்வைத் தனக்குள் நுகர்ந்து”
3.தன்னை அறியாது புகுந்த உணர்வினை ஆறாவது அறிவால் நீக்கி
4.தன் எண்ணத்தைத் தெளிவாக்கித் தெளிந்த உணர்வு கொண்டு வாழ்க்கை வாழ்ந்து
5.அருள் ஒளியின் சொத்தாகத் தன் உயிருடன் ஒன்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவரில் விளைந்த உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது காற்று மண்டலத்தில்… அதாவது பூமிக்குள் பரமாத்மாவாவிலே கலந்துள்ளது.

இதைப்போல மற்ற தாவரங்கள் உமிழ்த்தும் “அதனதன் உணர்வும்… அதனதன் மணமும்… அதனதன் குணமும்…” வெளிப்பட்டு வருவதை இதே சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாவிலே சுழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதருக்குள் எத்தகைய நோய்களாக விளைந்ததோ அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நோயின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமாத்மாவில் கலந்துள்ளது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆவதற்கு முன் நாம் உயிரினங்களாக வாழும் பொழுது
1.அந்தந்தச் சரீரத்தில் தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு விளைந்த உணர்வுகள் இதே பரமாத்மாவில் தான் உண்டு.
2.ஒவ்வொரு சரீரத்திலும் காத்திடும் உணர்வை ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த வித்தின் தன்மையாக
3.அந்தந்த உடலிலே காத்திட்ட உணர்வுகளும் இந்தப் பரமாத்மாவிலே கலந்துள்ளது.

இவ்வாறு “எத்தனை சரீரங்களில் நம்மைக் காத்திடும் உணர்வாக எடுத்துக் கொண்டோமோ” அது அனைத்தும் நமக்குள் வித்தாக இருப்பினும்
1.அதில் விளைந்த உணர்வுகள் அலைகளாகப் படர்ந்து இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்துள்ளது.
2.அத்தகைய நல் உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வளர்த்திடும் நிலையாக வர வேண்டும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலையை உணர்ந்து… நம்மை அறியாது மூடி மறைக்கும் தீமைகளை ஆறாவது அறிவு கொண்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றப் பழகிடல் வேண்டும்.