ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2024

புனித தேசத்தை உருவாக்குங்கள்

வீட்டில் கர்ப்பமுற்றார்கள் என்று தெரிந்தால் அந்தக் கருவில் வளரும் குழந்தை அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அந்த அகஸ்தியன் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று தியானித்து… உருவாகும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்க வேண்டும்.

அந்தப் பத்து மாதம் இவ்வாறு நீங்கள் ஒத்துழைத்து ஞானிகளைக் கருவிலேயே உருவாக்குங்கள். விஞ்ஞான அறிவால் இனி வரக்கூடிய பேரழிவுகளில் இருந்து உங்களைக் காக்கத் தாய் கருவில் வளரும் அந்த ஞானிகள் உதவுவார்கள்..
1.ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்த முடியும்
2.நம்மைக் காப்பது அவனாகத்தான் இருக்க முடியுமே தவிர “வேறு எந்தக் கடவுளும் நம்மை காக்கப் போவதில்லை… முடியாது…”
3.ஆகவே நாமே கடவுளாக இருந்து… ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கிடல் வேண்டும்.

ஆனால் கர்ப்பமுற்றிருக்கும் தாய்… சந்தர்ப்பத்தால் நடக்கக்கூடிய சில தவறான செயல்களைப் பார்த்துவிட்டு… “இவன் திருட்டுப் பயலாக இருக்கின்றான்…” என்று திருடனைப் பார்த்து அவன் செயலை நுகர்ந்தால் கருவிலே வளரக்கூடிய குழந்தை “திருடனாகத்தான் பிறப்பான்…”

உலகில் எங்கு பார்த்தாலும் அநியாயம் நடக்கிறது… கொள்ளை அடிக்கின்றார்கள்… வெட்டுகின்றார்கள்… குத்துகின்றார்கள்… கொலை செய்கின்றார்கள்… என்ற அந்த உணர்வை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பெருகி… பிறந்த பின் “அந்த வேலையைத்தான் அவன் செய்வான்…”

ஓரு மனிதன் வெட்டப்பட்டுப் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை கர்ப்பிணித்தாய் நுகர்ந்தால் அந்தக் குழந்தை உடலில் உள்ள உறுப்புகளும் அது போல் “சிதைந்து விடுகின்றது…”

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…!

சில வீடுகளில் பார்த்தால் ஒருவருக்கொருவர் தாக்குவதும்… கலவரம் செய்வதும்… குழந்தை கை கால்கள் ஊனமாவதும் அங்கங்கள் குறைவதும் இது எல்லாம் வருவதற்குக் காரணம்…
1.அந்த கர்ப்பிணித்தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது தான்… அதனால் வரக்கூடிய தீயவினைகள் தான்.
2.யாரையும் நாம் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்கள் எடுக்கும் உணர்வுகள் தான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது. நீங்கள் தான் அந்தக் கடவுளாக இருக்கின்றீர்கள்.
1.கருவிலே வளரக்கூடிய குழந்தைகளை ஞானிகளாகவும் உருவாக்க முடியும்… நோயற்றதாகவும் மாற்ற முடியும்
2.உலக ஞானம் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தி “உங்கள் கையிலே உண்டு…”

அந்த பத்து மாதம் எத்தகைய தீமையும் வராதபடி
1.உங்கள் முகத்தையே நீங்கள் உற்றுப் பார்த்துக் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.கருவில் இருக்கும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.
4.அவன் உங்களைக் காப்பான்… புழு பூச்சியாக உங்களை மாற விட மாட்டான்.

அவன் வளர வளர உங்கள் தெருவிலோ ஊரிலோ தோஷங்களோ தீயவினைகளோ எது இருந்தாலும் அது மாறும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

குடும்ப வம்சத்தையே அருள் வழியில் அழைத்துச் செல்லும் “பெரும் மகரிஷியாகின்றான்…!”

அவன் வளர வளர நீங்கள் அவனைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்… அந்த அருள் உணர்வு உங்களுக்குள் சேரத்தான் போகின்றது. அதன் வழி உங்களை அவன் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்வான்.

இதன்படி செய்து
1.புனித தேசமாக உருவாக்குங்கள்
2.இந்தக் காற்று மண்டலத்தையும் புனிதமாக்குங்கள்
3.அத்தகைய ஞானிகளை உருவாக்குங்கள்…!

இதைத் தவிர இனி வேறு வழியில்லை.

ஆனால் இன்றைய நடைமுறையில் அசுர உணர்வு கொண்டு எத்தனையோ செயல் நடந்து கொண்டுள்ளது. குடும்பத்தில் கருவுற்ற பின் “அது பெண் குழந்தை என்று தெரிந்தால்… எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி ஈவு இரக்கமற்றுக் கொல்கின்றார்கள். குழந்தையை உருவாக்கிய தாயே இதைச் செயல்படுத்துகின்றது

கரு உருவாவதற்கு முன்னே தடைப்படுத்தினால் கூட ஒன்றும் இல்லை.
1.கருவுற்ற பின் அதைக் கொல்வது மிகவும் தவறு.
2.ஏனென்றால் அவ்வாறு கருச்சிதைவு (ABORTION) செய்யப்படும் பொழுது அந்தச் சிசு எத்தனை வேதனைப்படுகிறதோ
3.அந்தத் தாய் நிச்சயம் அது அவஸ்தைப்பட்டே தீரும்… அந்தக் குடும்பமும் அதே நிலையில் சிதைவுண்டு போகும்.

நிறைய இடங்களில் வறுமையும் கொடுமையும் மற்ற நிலைகளும் சேர்ந்து இத்தகைய அசுர உணர்வுகள்… சமுதாயத்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து எல்லாம் மக்கள் அவசியம் மீள வேண்டும்.