ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2024

விஷ வைத்திய சாஸ்திரம்

இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.

அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் “இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து...” அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் விஷ வைத்திய சாஸ்திரம் பிறந்ததன் காரணம்.

தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் மகான்கள் இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட அளித்த வைத்திய பொக்கிஷங்களை எல்லாம் மறை பொருளாக்கப்பட்டதன் காரணம் என்ன என்றால் நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்...!”

போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.

அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!

அன்று பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.

அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது...” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்...!”

(மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை)

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…!