ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2024

மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்

இந்த உலகம் விஷத்தன்மை வாய்ந்ததாகப் போய்க் கொண்டிருப்பதால்… எத்தகைய துயரமோ சங்கடமோ சலிப்போ பயமோ போன்ற நிலைகளைப் பார்க்க நேர்ந்தால்… அதை நுகர நேர்ந்தால்… அடுத்த கணம்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின்படி ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.உங்கள் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யுங்கள்
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.கவலையோ மற்ற எதுவாக இருந்தாலும் அதை மாற்றிப் பழகுங்கள்.

அங்குசபாசவா…! மனிதனான பின் இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றுகிறது. நஞ்சைக் கழிக்கும் சக்தியான கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வலுப்பெற்றால் நம் எண்ணங்கள் அனைத்தும் பழுதாகிவிடும்… நம் உடலும் பழுதாகிவிடும்… நம் செயலும் பழுதாகிவிடும். அவ்வாறு பழுதாகாதபடி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் சிறிது காலம் தான் இந்த உடலில் நாம் வாழுகின்றோம். அதற்குள் நல் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும். அதற்காகத் தான் இராமேஸ்வரத்தில் “இராமன் மனதைக் குவித்து ஒன்றாக்கினான்…” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

வாழும் காலத்தில்…
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…
2.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.பிறர் மேல் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்றாக்கினால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றுகின்றது.

ஆனால் எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்களே… சும்மா விடுவதா…? என்று எண்ணினால் மனம் இருண்டு விடுகின்றது. மீண்டும் புவியின் பற்றுக்குத் தான் வந்து விடுகின்றோம்.

ஆகவே வாழக்கூடிய குறுகிய காலத்தில் பகைமைகளை மறந்து அருள் ஞானத்தைப் பெருக்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வர வேண்டும்.

இதற்குத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் குவித்தான் என்று காட்டினார்கள். ஆனால் அந்த உண்மையின் இயக்கங்களை அறிய முடியாதபடி போய்விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேரருளும் அவன் துருவனாகித் துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்
2.அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை உங்கள் இருப்பிடமாக்க வேண்டும்..