ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2019

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!


கேள்வி:-
குழந்தைகளைப் பக்குவப்படுத்தி மெய் ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும்...?

பதில்:-
குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு
1.நம்முடைய வீடு...
2.நம்முடைய சகோதரர்கள் உறவினர்கள்...
3.நம் விவசாயம் என்ன?
4.நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்துப் பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.
1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் ஆசைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன் இவ்வாறு செய்கிறாய்? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி “இப்படித்தான் இருக்க வேண்டும்!” என்று சிறிது காலம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் எண்ணியபடி படிப்பிலும் மற்ற நல்ல பழக்கங்களிலும் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.

செய்யத் தவிர்க்க வேண்டியது:-
1.குழந்தையைக் கவனிக்க முடியவில்லை அவன் அழுது கொண்டே இருக்கின்றான் என்று சொல்லி விட்டு செல் ஃபோனையோ டி.வி.யையோ பார்க்கப் பழகிக் கொடுக்கக் கூடாது
2.குழந்தையை வெறுப்புடனோ ஆத்திரத்துடனோ எதிலுமே கட்டாயப்படுத்தக் கூடாது.
(3.நீ இந்த உண்மையை உணர்ந்து கொள்... நீ சிந்தித்துப் பார்... என்று அவனிடம் இருக்கும் நல்ல உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்
4.ஒரு தடவைக்குப் பத்து முறையாவது நாம் சொல்ல வேண்டும்.)
5.வீட்டில் குழந்தையால் தொல்லையாக இருக்கிறது என்று குழந்தையை மற்றவர்களிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லும் பழக்கம் வரக்கூடாது.
6.குழந்தையை எக்காரணம் கொண்டும் (மனதில் கூட) சாபமிடக் கூடாது... இவன் எல்லாம் உருப்பட மாட்டான்... என் உயிரையே வாங்குகிறான்... நாசமாகப் போகிறவனே... என்ற எண்ணமே வரக்கூடாது.
7.நம் வேலைக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என்று அவனை அலட்சியப்படுத்தக் கூடாது (அலட்சியம் செய்தால் அவன் மேலும் நமக்குத் தான் தொல்லை தருவான்)
8.குழந்தை மேல் அவநம்பிக்கை கொள்ளவே கூடாது...! (கண்டிப்பாக ஞானியாக வளர்வான் என்ற எண்ணம் வர வேண்டும்)

செய்ய வேண்டியது:-
1.கூட்டுத் தியானங்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.
2.ஞான உபதேசங்களைக் குழந்தைகளில் காதில் விழும்படியாகக் கேட்க வைக்க வேண்டும்.
3.மெய் ஞான நூல்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல் வாசித்து அதைக் குழந்தைகளைக் கேட்க வைக்க வேண்டும்.
4.கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உணவோ தண்ணீரோ பாலோ கொடுப்பதிலிருந்து மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது நாம் அந்த அருள் உணர்வுகளுடன் தான் அதைக் கொடுத்துப் பழக வேண்டும்
5.அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை நாம் பதிவாக்காது நம்முடைய நல்ல உணர்வுகளை அவர்களுக்குள் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
6.ஞானத்தைப் பெறுவதும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் (அகஸ்தியர் போகர் வான்மீகி வியாசகர் கொங்கணவர் அத்திரி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் இராமலிங்க அடிகள்)  அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் குழந்தைகளுக்குச் சொல்வதுமே குழந்தைகளுடைய பொழுது போக்காக இருக்க வேண்டும்.
7.ஆக மொத்தம் நாம் நம்முடைய கண்களால் சொல்லால் குழந்தைள் நல்லதைக் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும்..! நல்லதைப் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டும்...!
8.எந்த நிலையிலும் குழந்தைகளுக்கு இதைப் பதிவாக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் நமக்குள் வர வேண்டுமே தவிர குழந்தை கேட்கவில்லை.. கவனிக்கவில்லை.. அவனுக்கு இஷ்டமில்லை அவன் கேட்க மாட்டான்.. எதற்கு இதைச் செய்ய வேண்டும்...? என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது.
9.இன்றைய சுட்டிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக ஞானிகளாக வருவார்கள்.
10.வாய் வழியாகச் சொல்லிச் சொல்லி அவனைத் திருத்த வேண்டும் என்பதற்குப் பதில் அவனுக்குள் ஆழமாகப் பதிவாக்கக் கூடிய செயல்களைத் தான் செய்ய வேண்டும்.
11.நாம் செய்யும் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் குழந்தையிடம் வித்தாகி விளைந்து வருவதை 48 மணி நேரத்திலோ 48 நாளகளிலோ உறுதியாகக் குழந்தையிடம் பார்க்கலாம்.

எங்கள் குழந்தைகள் அனவைரும் உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக வருவார்கள்...!” என்ற வைராக்கியமான எண்ணம் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் வர வேண்டும் (இது தான் மிகவும் முக்கியம்)