ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2019

“வான இயல் சூத்திரதாரி...!” வராகிமிகிரர் என்ற வராகிமிகி மகரிஷி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகையில் அவர் அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும் தன் உயிராத்ம வலு கொண்டு ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிக மகரிஷி...!

நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.

அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்...” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.

1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தி
6.ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்
7.நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை
8.யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?

பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்றோடுகிறது. இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.

அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.

சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.

அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.

மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு...! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.

பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.

இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சுத்திரதாரியே வராகமிகி.

அவருடைய அருள் சக்தி பெற்று அனைத்து மண்டலங்களிலும் செயல் கொண்டிடும் பூரணத்துவம் அறிய நாமும் தியானிப்போம்.