ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2019

ஞானிகள் அமர்ந்து தியானம் (தவம்) செய்த இடங்களின் மகிமைகள்


அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்த பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்த பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!