ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2019

மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்குமே பூர்வ புண்ணியம் ஒன்று உண்டு...!


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்திய ஆற்றல் மிக்க அச்சக்தியை அவர் காட்டிய அருள் வழியில் அதனைக் கண்டுணர்ந்தேன்.

அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்தியை எமக்குள் வித்தாக விளைய வைத்ததைச் சொல்லாக உங்களுக்குள் உபதேசிப்பதே இந்த நிலை.

யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் ஞான வித்துக்களை உங்களுக்குள் பதிவு செய்து கொண்ட பின் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரப்படும் போது அறியாது வந்த தீயவினைகள் அனைத்தையும் உங்களால் அகற்ற முடியும். நல்ல பலன் கிடைக்கும்.

காரணம்... நாம் அனைவரும் யாருமே தவறு செய்யவில்லை...!

ஏனென்றால் தாய் கருவிலே நாம் சிசுவாக வளரப்படும் போது
1.நம் தாய் பாசத்தால்... அன்பால்.. பரிவால்... தனது வாழ்க்கைத் தொடரில்
2.பிறர் செய்யும் தீமைகளை அது கண்டுணர்ந்து இருந்தால் அந்த உணர்வின் ஆற்றல்
3.தாய் கருவுக்குள் வளர்ந்து வரும் சிசுக்களில் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.
4.அவ்வாறு பதிவான நிலைகளைத்தான் “பூர்வ புண்ணியம்...!” என்பது.

தாயிற்கோ தான் கேட்டுணர்ந்த பார்த்த உணர்வுகள் அனைத்தும் “ஊழ்வினை” என்ற வித்தாக அது உடலுக்குள் அமைந்து விடுகின்றது.

ஆக தாய் தான் உலகை அறிந்திடும் நிலைகளில் தீமைகளைத் தீமைகள் என்று உணரப்படும் போது
1.அந்தத் தீமையின் உணர்வே
1.கருவில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்குப் பூர்வ பூண்ணியமாக அமைந்து விடுகின்றது.

உதாரணமாக கர்ப்பமுற்றிருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை அட பாவமே...! என்று மிகுந்த இரக்கத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால்
1.அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வுகள்
2.தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குள் சேர்ந்து
3.அதையும் ஊனமான குழந்தையாக மாற்றி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ ஊனமுற்ற குழந்தைகளைப் பற்றியோ அல்லது இரண்டு குழந்தைகள் அப்படியே ஒன்றாக ஒட்டிக் கொண்டு பிறந்தது என்று விசித்திரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்,

அது சமயம் வீட்டிலிருக்கும் கர்ப்பமான தாய் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கேட்டு கூர்மையாக நினைவைச் செலுத்தினாலே போதுமானது.

கருவுக்குள் இருக்கும் சில நிலைகள் உருமாரி் அதுவே ஒட்டுக் குழந்தைகளாக பிறந்து விடுகின்றது.
1.ஆக எப்படிப் பார்த்தாலும்
2.தாய் கருவிலே விளையும் நிலைகள் தான் எல்லாமே...!

இதைப் போன்ற சில சில நிலைகள் கர்ப்பமாக இருக்கும் போது கேட்டுணந்த நிலைகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து “அப்படி வந்தவர்கள் தான் நாம் அனைவருமே...!”

ஆனால் கர்ப்பமான தாய் ஞானிகளை உற்று நோக்கி அவர்கள் உணர்வுகளை எண்ணி ஏங்கி எடுத்திருந்தால் அந்த உணர்வுகள் தாயின் கருவிலே இருக்கும் குழந்தைக்குள் ஞானமாக விளைந்து அது “மெய் ஞானியாக...” வளர்கின்றது.

அகஸ்தியர் திருஞானசம்பந்தர் போன்ற ஏனைய ஞானிகள் எத்தனையோ பேர் குழந்தைப் பருவத்திலேயே ஞானிகளாகச் செயல்பட்ட  நிலைகள் உண்டு. இவை எல்லாம் தாய் கருவிலே வளர்ந்த சக்தியின் ஆற்றல் தான்...!

அந்த ஞானிகள் வளர்ந்தது போல் நீங்களும் வளர வேண்டும் என்ற ஆசையில் தான் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.