ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2019

வசி...! வசிஷ்டாத்வைதம் - இராஜரிஷி வசிஷ்டர்


மனிதனின் வாழ்க்கையில்
1.நம் உயிரை அரசனாகவும்
2.நம் உடலை ஓர் அரச சபையாகவும்
3.அதற்குள் நீதிகள் வழங்குவதை நற்குணங்களாகவும்
4.சந்தர்ப்பத்தால் நாம் கண்டுணர்ந்த தீமைகள் அது நமக்குள் கலந்திடும் நிலையை மக்களாகவும்
5.வசிஷ்டாத்துவத்தில் வியாசகர் காட்டியுள்ளார்.

உடலுக்குள் வந்த அந்த மக்களைத் (தீமைகளை) திருத்திடவும் மக்களைத் தன்னுடன் இணைத்திடவும் அரச நீதி என்ற நிலையில் உயிரின் தன்மை இயங்கினாலும் இராஐ சபையில் இருக்கும் அதாவது நமக்குள் இருக்கும் நற்குணங்கள் அதனதன் செயல்களை எடுத்து உணர்த்துகின்றது.

இவை அனைத்தும் அடங்கி ஒடுங்கி நிற்கும் இராஐசபைக்கு இராஐ ரிஷியாக “வசிஷ்டர்...!”
1.அதாவது எதையுமே கவர்ந்திடும் நிலையும்
2.அது தன்னுடன் இணைத்திடும் ஆற்றல்மிக்க சக்தி என்பதையும் காட்ட
3.வசிஷ்டர் என்ற நிலையில் காரணப் பெயரை வைத்தார்கள்.

ஆனாலும் நமக்குள் இயங்கும் சக்திகள் அனைத்துமே அருந்ததி.
1.நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றமோ
2.அந்த உணர்வின் சக்திகளை நமக்குள் அருந்தி (சுவாசித்துக் கவர்ந்து)
3.அது பதியாக நமக்குள் இயக்கும் நிலைதான் அருந்ததி.

அவ்வாறு இயங்குவதைக் காட்டி அது எதுவாக இருப்பினும் இந்த இராஐரிஷி “வசிஷ்டர்” தனக்குள் இணைந்த செயலாக தன்னை மீறாத நிலைகள் கொண்டு தனக்குள் ஒடுக்கி உயிருடன் (அரசன்) இழுத்து நமக்குள் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் நல்ல குணங்களுக்கும் நீதி வழங்கும் நிலைகள் வருகின்றது.

நல்லதைப் பல வகையில் பேசினாலும் அல்லது தீமைகளைப் பேசினாலும் அதனதன் குணத்தின் தன்மையே ஒவ்வொருவருக்குள்ளும் வரும்.

உதாரணமாக மல்லிகைப் பூ நறுமணத்தைக் கொடுக்கின்றது, தாழம்பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது. ரோஜாப் பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது.

ஒவ்வொரு பூவின் நறுமணமும் மகிழ்ச்சியை நமக்குக் கொடுத்தாலும் தாழம்பூ தன்னுடைய நறுமணத்தை அதிகமாக வீசினாலும் நல்ல நறுமணத்தைக் கொண்ட ரோஜாப்பூவின் மணத்தைத் தன் அருகிலே விடுவதில்லை. தன் மணத்தின் தன்மையையே அது ஓங்கி வளர்க்கும் தன்மைக்கு வருகின்றது.

இதைப் போலத் தான் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும் அந்த ஒவ்வொரு குணங்களும் அது (மணத்திற்குள்ளே) ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலையே உண்டு. (தாவர இனத்தின் மணங்களை உயிரினங்கள் சுவாசித்தால் அது எண்ணங்களாக வரும்)

மல்லிகைப் பூ கசப்பும் ரோஜா பூ துவர்ப்பும் கொண்டது. இவை இரண்டுமே நறுமணங்கள் கொண்டதாக இருப்பினும் இதற்குள் கலந்த உணர்வின் செயல்கள் அது மாறுபட்டதாகவே இருக்கும்.

அதற்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் நஞ்சான நிலைகள் கொண்டு எதனுடன் கலக்கின்றதோ அதனின் வலுவாக அது இணைத்துக் கொள்ளும்.

இதைப் போலத் தான் எத்தகைய நறுமணங்கள் கொண்டு இருப்பினும் தனக்குள் “வசி...!” அதாவது தன்னுடன் இணைந்து செயல்படும் சக்தியாக இராஜரிஷி என்ற நிலைகளில் வசிஷ்டாத்துவத்தை அன்று வியாசகர் மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் இயக்கங்களைக் காட்டுகின்றார்.

இராஐ நீதியாக அரசன் அவன் மற்றவரின் செயலைக் கேட்டறிந்து நீதி வழங்குவான் என்ற நிலைகள் போல நாம் உயிரின் நிலைகளைக் காட்டுகிறார் வியாசகர்.

ஒரு சேனாதிபதி இருக்கிறான் என்றால் “அடுத்த நாட்டுக்காரன் நம் நாட்டின் மீது படையெடுக்கின்றான்...!” என்று அவன் கூறுவான் என்றால் அவன் கேள்வியுற்றதைத்தான் வந்து சொல்லுவான்.

அரச சபையில் அதைச் சொல்லும் போது அதைக் கேட்ட அரசனோ... “தன் நாட்டைக் காக்க வேண்டும்...!” என்ற நிலையில் சேனாதிபதி சொன்னதைக் கேட்டு ஆவேசமாக அதனின் உணர்வை இயக்கிக் காட்டுவான்.

ஒருவன் நம்மைப் பழித்து பேசுகிறான் என்று கேள்விப்பட்டதும் நாம் என்ன செய்கிறோம்...? உடலின் தன்மை கொண்டு நம் குணங்களைக் காத்திட “இப்படிச் சொல்கிறானே...!” என்ற ஆவேச நிலைகள் படுகிறோம்.

ஏனென்றால் நாம் எண்ணிய நிலைகளை வைத்து நம் உயிரே அவ்வாறு இயக்குகின்றது என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கு வசிஷ்டாத்துவம் என்ற நிலைகளை வியாசகர் பிரித்துக் காட்டுகிறார்.

உடலின் உறுப்புக்குள்ளும் உயிருக்குள்ளும் இயக்கும் நிலைகளை மகரிஷிகள் கண்டுணர்ந்து நஞ்சை எல்லாம் ஒடுக்கித் தான் ஒளியின் சரீரம் பெற்றதை அதே வியாசகன் கண்டுணர்ந்த இந்த உணர்வின் தத்துவத்தை நமக்குள்ளும் அது ஆரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 வியாசகர் சொன்ன வசிஷ்டாத்துவத்தைப் போன்று நமக்குள் அது எத்தனை நிலைகள் வந்தாலும் அதனைக் காத்திட வேண்டும் என்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.இதை உணர்த்திய மகரிஷிகள் அருள் ஒளி கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்றும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து நிலைகளையும் அந்த மகரிஷிகள் அடக்கியது போல அடக்கி
4.ஒளியாக ஆக்கி ஒளியின் சரீரமாகப் பெறவேண்டும்.