ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2019

கேன்சர் நோயை ஆரம்பத்திலேயே ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை...!


அதிகமான வேதனைகளை நாம் படுவோம் என்றால் அது கேன்சராக அதனின் வித்தாக உடலுக்குள் முளைக்கத் தொடங்கி விடுகின்றது.

கேன்சருக்குண்டான வித்தாக இருந்தாலும் உடலில் அது உருவான நிலையில்
1.முதலில் அது ஒன்றுமே தெரியாது.
2.அதனின் முதிர்ந்த பருவம் வந்த பின் தான் அதை அறியவே முடியும்.

உதாரணமாக ஓரு கஞ்சாச் செடி வளர்ந்து வந்தாலும் கடைசியில் அதிலிருந்து “பிசின் ஒழுகும்போது தான்...!” அதனுடைய மணங்கள் தெரியும். அது வரையிலும் அது கஞ்சாச் செடி என்று நாம் தெரிந்து கொள்ளவே முடியாது. அந்தப் பிசின் வந்த பின் தான் அதனுடைய மணத்தை அது வீசும்.

அதைப் போன்று தான் மனிதன் தான் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அது சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்து (கஞ்சாச் செடியை போல) அதனின் மணத்தை வேதனையாக உருவாக்கும் போதுதான் கேன்சர் என்றே அறிய முடியும்.

அது வரையில் வயிற்று வலி அந்த வலி இந்த வலி என்ற மேல் வலி கை வலி என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக எத்தகைய மருந்தைச் சாப்பிட்டாலும் அது முழுவதும் சரியாகாது.

இப்படி சிறுகச் சிறுக அந்த வேதனையைக் குறைத்து வந்தாலும் அது முழுமையான வித்தாக அடையப்படும் போது... “நாம் ஒன்றுமே செய்ய முடியாத நிலைகள் ஆகிவிடுகின்றது...!’

இன்று இருக்கும் நவீன விஞ்ஞானக் கருவிகள் கொண்டு கேன்சரைக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திட முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

ஒரு வேதனை என்ற வித்து உடலுக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகளை அதிகமாக உடல் முழுவதும் பரப்பி நாம் எணணிய எண்ணத்துடன் இணைந்து மூளை பாகம் வரையிலும் அதன் தொடர்பலைகள் சென்றுவிடும்.

உடலில் ஒரு பக்கம் உருவான கேன்சர் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்தாலும்
1.மூளையில் இருந்து எண்ணத்தால் உருபெறும் உணர்வுகள்  அதன் விழுதின் தொடர் கொண்டு
2.மீண்டும் அதனுடைய நிலைகள் தொடர் வரிசையாக
3.இன்னொரு இடத்தில் வளரத் தொடங்கும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து இதே வேதனை என்ற நிலைகள் உருவாகி வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கிச் செயல்படுத்திவிடும்.
1.அதை முழுமையாக அகற்றிடும் நிலை இல்லை.
2.நஞ்சின் வீரியத் தன்மை அதிகரிக்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.
3.மனித வாழ்கையில் நாம் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

ஏனென்றால் தவறு செய்வோரை உற்று நோக்கி அதனால் வேதனைப்படுவதும் அல்லது குடும்பத்தின் மீது பாசம் பற்றும் இருக்கப்படும் போது சந்தர்ப்ப பேதத்தால் கவலையோ சோர்வோ சஞ்சலமோ அடையப்படும் போது ஒரு காரியம் சித்தி அடையவில்லை என்றால் வேதனை என்ற நிலையும் வருகின்றது.

பையன் மேல் பற்றுக் கொண்டு இருக்கும் பொழுது அவனுக்குச் சிறிது காய்ச்சல் வந்தாலும் வேதனைப்படத் தொடங்கி விடுகின்றோம். இதைப் போல ஒவ்வொரு செயலிலும் இனம் புரியாத பலவீனங்கள் நமக்குள் ஆட்கொண்டு நஞ்சின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்தபின் நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் பெற்றிருந்தாலும் நஞ்சுக்குள் சிக்குண்டு மனிதனின் உணர்வைத் தாழ்த்தி நஞ்சின் உணர்வாகவே விளைய வைத்து மனிதனின் எண்ணங்கள் சுருங்கி இறந்த பின் மனிதப் பிறவி இல்லாத நிலைகள் வருகின்றது.

இறக்கும் தறுவாயில் இன்னொரு மனிதன் மேல் ஆசை பற்று வைத்திருந்தால் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் நாம் போக நேரிடுகின்றது.

வேதனையால் உடல் நலிந்து எண்ணங்கள் குறைந்து வேதனை என்ற உணர்ச்சியின் வேகம் இன்னொரு உடலுக்குள் போனாலும் அங்கேயும் நம் உடலில் வந்த நோய்களைத் தான் உருவாக்க முடியும்.

எந்த உடலுக்குள் சென்றோமோ அங்கேயும் நஞ்சை விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்ததான் முடியுமே தவிர அங்கே நாம் மனிதனாகப் பிறக்கவும் முடியாது. மனித உருபெறும் நிலையும் அற்றுப் போய்விடுகின்றது. அடுத்தாற்போல் மனிதனே இல்லாத உருவாக நம்மை உயிர் உருவாக்கிவிடும்.

ஒரு எறும்பு கடித்தால் நாம் வேதனைப் படுகின்றோம். கொசு கடித்துவிட்டால் நம் உடலில் அரிப்பு ஏற்படுகின்றது.

ஆனால் ஒரு மாட்டிற்கு நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாக இருக்கின்றது. ஆக நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் இந்த உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

இருந்தாலும் நஞ்சின் நிலைகள் உடலுக்குள் அதிகரித்த பின் அந்த நஞ்சே தனக்கு உறுதுணையாக இருந்து அதற்குகந்த அடுத்த உடலமைப்பாக அந்த உடலைக் காத்திடும் நஞ்சின் நிலையாக மாற்றி விடுகின்றது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும் இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் எலும்புக்குள் ஊனுக்குள் பதிவாகி இருக்கும் வேதனை என்ற வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும். கேன்சர் நோயிலிருந்து முழுவதும் விடுபடவும் முடியும்.