ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2022

உங்கள் ஆர்வத்தை எதிலே காட்ட வேண்டும்...?

 

வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டுத் தடுத்துக் கொள்வது போல் தீய சக்திகள் உங்களுக்குள் புகாதபடி தியானத்தின் மூலம் அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.இதற்குக் காசோ... பணமோ... ஒன்றும் தேவையில்லை.
2.அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஒரு அரை மணி நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்தச் சக்தியினை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

யாம் (ஞானகுரு) ஆரம்பத்தில் கொடுத்த உபதேசங்களை யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் சிரமம். உபதேசம் கேட்ட பழைய அன்பர்களுக்குத் தெளிவாகத் தெரியும். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும். யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்போது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காரணம் முன்னாடி சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன். மந்திரவாதிகள் அதைத் திருடிச் சென்று விடுவார்கள் என்பதற்காக... பட்டும் படாமல் அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காக்க் கட...கட...கட... என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை.

உலகம் இன்று மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலையாக இருப்பதால் எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பவரைக் (POWER) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

1.இதை கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்
2.இந்த உலகையும் காக்கலாம்... ஊரையும் காக்கலாம்... உங்கள் வீட்டையும் காக்கலாம்...!

யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை முறைப்படுத்திக் கொண்டு பக்குவப்படுத்தி கொண்டு வந்தாலே போதுமானது. நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. சிரமத்திலிருந்து நீங்கள் விடுபடுவதற்கான வழிகளைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நான் சிரமப்பட்டேன்... தெளிந்தேன்...! அந்தத் தெளிந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று குரு வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.இதில் நீங்கள் யாராவது தயாரானால் தான் உண்டு
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்ல முடியாது
3.அது போன்ற நிலை இல்லாதபடி நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்.

காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மையாக மாறி விட்டது. கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போலக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியனும் அழியக் கூடியது தான். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய பூமி எந்த நேரம் தலை கீழாக ஆகும்...! என்றும் சொல்ல முடியாது. அணு குண்டுகள் வெடித்தால் போதும்.

ஏனென்றால் குறுகிய காலமே இருக்கின்றது. 2004க்கு மேல் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்..! அந்தக் கடுமையான உணர்வுகள் காற்றலைகளில் பதிவாகின்றது.

பத்திரிக்கையிலும் டிவியிலும் பார்த்து அதை எண்ணும் போது நமக்குள்ளும் தீவிரவாதம் ஆகிவிடுகின்றது.
1.நம்மை அறியாமலே பகைமைகள் வருகின்றது
2.நம்மை அறியாமலே உடலுக்குள் தீமைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

எப்படியும் நீங்கள் சிறிது பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் அதை வைத்து மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.

நான் ஒருவன் இருந்தால் போதுமா...! நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன்.

உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். அதன் மூலம் நன்மைகள் நடக்கிறது என்றால் அதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை
1.இந்த மாதிரித் தெரிகின்றது
2.இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்...?
3.எப்படிப் பக்குவப்படுத்துவது...? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாமியிடம் (ஞானகுரு) எப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வது...? என்று எண்ண வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அதிகாலையிலேயே தினமும் உங்களுக்கு உயர்ந்த சக்தியை ஏற்றிக் கொடுப்பது.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்...
1.ஆயிரம் பேருக்குப் பல தீமைகளைப் போக்க முடியும்
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காப்பாற்ற முடியும்.

ஆகவே பழமையையே எண்ணாதபடி எதிர்காலத்தின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள ஆர்வத்தைக் காட்டுங்கள்...!