ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2022

உடலுக்குள் புகுந்த ஆன்மாவைப் புனிதப்படுத்தத் தான் வேண்டும்… வெளியேற்ற முடியாது - ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்...!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன...?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா...” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய்… பிசாசு… என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே…
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி
2.எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலை கொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்... அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

1.அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு
2.துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால்
3.தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து
4.இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது… பிசாசு பிடித்துள்ளது… ஆவியை ஓட்ட வேண்டும்… என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டிப் பல வித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்...?

அவ்வாவிக்குப் பிற உடலில் ஏறித் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்குச் சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது...?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே...
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்லை. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.