ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2022

உடலை விட்டுப் பிரிந்த பின் நம் நிலை… - ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்ட மனிதர்களுக்கெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்... நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு...
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக்குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்...
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதே போல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன...?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே... ஷாஜஹான் என்னும் ஆவியும்...!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை… மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே...!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.