ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2022

உபதேசத்தைப் பதிவாக்கி நினைவாக்கினால் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகள் தன்னிச்சையாகச் செல்லும்...

 

நாம் எந்தக் காரியத்தை எண்ணினாலும் தாய் தந்தையை நினைத்து “அவர்களை முன்னிலையில் வைத்துச் செயல்பட்டால்...” நம் உயர்வுக்கு அது என்றுமே வழி காட்டும்.

நம் அன்னை தந்தையர் எப்போதுமே நாம் உயர வேண்டும்... நாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்... நாம் அன்பாக இருக்க வேண்டும்... பண்பாக இருக்க வேண்டும்... ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... செல்வச் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.
1.வேறு யாரும் அவ்வாறு எண்ண மாட்டார்கள்...
2.தந்தைக்குக் கூட சில நேரம் வெறுப்பும் கோபம் வந்துவிடும்.
3.தாயின் மனதை எப்பொழுதும் நாம் எண்ணி இருக்க வேண்டும்.

தாய் கருவில் இருக்கும் பொழுது பத்து மாதம் நம்மைச் சுமந்தது. பிறந்த பின் நம்மை வளர்ப்பதற்கு எத்தனையோ கஷ்டப்பட்டது.
1.என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும்... என்று
2.தாய் ஒன்று தான் நம்மை எவ்வாறு எண்ணும்.
3.அவருடைய ஆசை “நாம் உயர வேண்டும்...” என்பது தான்.

அந்தத் தாயின் ஆசையின் துணை கொண்டு தான் தியானத்தில் நாம் சக்தி எடுக்கப் பழக வேண்டும்.

அம்மா அப்பா அருளால்... அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்... கண்களை திறந்தே...!

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதைக் கேட்டு நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள். இந்தப் பதிவின் நினைவினை உங்கள் கண்ணிற்குக் கொண்டு வாருங்கள்.

கண்னின் நினைவுகள்...
1.எதைத் துருவ நட்சத்திரம் என்று சொன்னேனோ
2.அங்கே அழைத்துச் செல்கின்றது உங்களுடைய உணர்வுகளை.
3.இந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கவரும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள், கண்ணின் கருமணியில் இப்பொழுது ஈர்க்கும் சக்தி வரும். கண் கனமாக இருக்கும்.

மெதுவாகக் கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள் கண்ணின் நினைவினை...!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவனைப் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் சக்தியைப் பெறுங்கள். அவ்வாறு ஈர்க்கும் ஆற்றல் பெற்றால்
1.புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு அதிகரிக்க... அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

உயிரின் ஈர்ப்பில் கண்களில் எப்படி முதலில் கனமாக இருந்ததோ புருவ மத்தி வழியாக ஈர்க்கும் சக்தி வரும் போது அங்கேயும் கனமாக இருக்கும். உயிரிலே மோதும் பொழுது வெளிச்சங்கள் வரும்.

உடல் முழுவதும் அந்த ஒளி சக்தி பரவும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும் சக்தி இப்பொழுது பெறுகின்றது.