ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2022

ஒளிச் சரீரம் பெற்றால் அகண்ட அண்டத்தில் “எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்...”

 

மனிதனாக ஆன நிலையில் பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம்...? இந்தச் சரீரத்தில் தீமைகள் நமக்குள் வராதபடி எப்படிப் பாதுகாக்க வேண்டும்...? என்று சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்...
1.பெரும்பகுதி பற்று கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் தான் செல்கிறது.
2.காரணம்... அந்த உடலில் நோயான பின் அவரைச் சார்ந்தோர் பாசமாக எண்ணும் போது
3.இறந்த பின் அந்த உடலுக்குள் அந்த ஆன்மா போகின்றது.
4.அங்கே போய் அதே நோயை அங்கே உருவாக்கி அந்த உடலையும் பலவீனப்படுத்தித் தேய்பிறை ஆகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் சிவன் இராத்திரி என்று நீ தனித்திரு... நீ விழித்திரு...! என்று சொன்னது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் தன் இன மக்கள் அனைவரும் தான் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்று தான் இதை அவன் வெளிப்படுத்தினான்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றனர் பத்தாவது நிலையாக.
1.எந்தத் துருவத்தை உற்று நோக்கினரோ அதே எல்லையில்...
2.துருவ நட்சத்திரமாக உருப்பெற்று இன்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் சூரியன் ஒன்பதாவது நிலைதான். மனிதனாக உருவான பிற்பாடு தான் பத்தாவது நிலை அடைகின்றது. ஒளியின் சரீரமாக என்றும் நிலையான பிறவியில்லா நிலை அடைகின்றது.

அப்படிப்பட்ட நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகி
2.இந்த அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அவர்களுக்கு அழிவில்லை. ஏனென்றால்
1.இந்தப் பிரபஞ்சம் மற்ற பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொண்ட சக்தி இங்கே உண்டு
2.அதன் துணை கொண்டு இது அழிந்தால் அடுத்த நிலைக்குச் செல்லும்.
3.அதன் உணர்வை எடுத்துக் கொண்டு ஒளியாக மாற்றும்
4.இப்படித்தான் பிறவி இல்லாப் பெரு வாழ்வு என்று மனிதனான பின் ஒளியின் தன்மை பெற்றது.

ஒரு வெப்பத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வினை ஒளியாக மாற்றும் சூரியனாக ஆன பின் இதற்குள் உயிரணு தோன்றுகிறது.

தோன்றியபின் நஞ்சினை வடிகட்டும் உணர்வின் தன்மை பெற்றுப் பெற்று... பரிணாம வளர்ச்சியில் மனிதனாகிறது. மனிதனான பின்...
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை வென்றிடும் உணர்வை
2.கணவன் மனைவி இரண்டு பேரும் எடுக்கப்படும் போது அவனைப் போன்றே ஒளியின் தன்மை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் கணவர் பெற வேண்டும். அவர் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும். அவருடைய பார்வை எங்களை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அதையே கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியின் சுடரை எடுத்து யாரெல்லாம் வளர்த்துக் கொள்கின்றனரோ
1.அவர்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் பிளக்கின்றது...
2.இரு உயிரும் ஒன்றாகி சிவசக்தியாக ஒளி நிலை பெறுகின்றனர்.

ஆகவே... இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்...? என்று இவ்வாறு வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும். சிவன் ராத்திரி என்று அதனால்தான் விழித்திரு என்று சொல்வது...!