ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2022

நம் உயிர் கொடுக்கும் தீர்ப்பு

 

நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். காரணம்... நாம் எதை எண்ணுகின்றோமோ
1.அதைத்தான் இயக்குகின்றது
2.அதைத்தான் உடலாக்குகின்றது
3.அதைத் தான் ஆளுகின்றது.

அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகின்றது. உடலான மணமே நமக்குள் எண்ணமாகி இந்த எண்ணத்தின் உணர்ச்சியே நம் வாழ்க்கையின் செயலாகவும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கி அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய உலக நிலைகளில் இருக்கும் விஷத் தன்மைகளை நமக்குள் கவராது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையைப் படித்தாலும் டி.வி.யைப் பார்த்தாலும் பிறருடைய குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டாலும் அந்த அறிந்து கொண்ட தீமைகள் நமக்குள் வளராது ஒவ்வொரு நொடிக்கும் நாம் மனத் தூய்மை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்... நமது வாழ்க்கையில் இந்தக் கணக்கு கூடினால்...
1.அதற்குத் தக்க நமது உயிர் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும்
2.பிறவியில்லா நிலையாக அடுத்த பிறவி இல்லை என்று உயிர் தீர்ப்பளிக்கும்.

அதிலே சிறிது தவறினால் உயிரான்மாவில் விஷத்தின் தன்மையே வலிமையாகும். அந்த உணர்வின் அடிப்படை நமக்குள் வளர்ந்து விட்டால் அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக் கடலில் அமிழ்த்திவிடும்.

மனிதனாக வரக்கூடிய காலம் எப்போது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் மனிதன் இறந்தால் மீண்டும் மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்.

மனிதனே மிருக உணர்வு கொண்டு மாறும் நிலையாகிக் கொண்டிருக்கிறது.
1.பண்டைய கால மக்களோ தங்கள் அனுபவத்தால் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
2.இன்றோ விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தின் தன்மையாக மாறி மனிதனல்லாத உருவையே உருவாக்கிடும் நிலை வளர்ந்து விட்டது.

ஆக விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் கூடிக்கொண்டே வந்தாலும் இந்த உடலை ஆனந்தப்படுத்துவதற்காக “இரவு நேரக் கேளிக்கைகள்” என்ற பேரில் எத்தனையோ தவறான பாதையில் மதுவையும் தன்னை மறந்து... அதிலே ஆனந்த நிலைகள் பெற வேண்டுமென்று நகரங்களில் ஆனந்தக் கூத்தாடும் நிலைகளாக வைத்து விட்டார்கள். அரசும் இதை அனுமதிக்கிறது.
1.இந்த உடலில் இது போன்று இன்று காணும் சொர்க்கம்
2.அடுத்து நம்மை நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை மறந்து விட்டார்கள்.

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகிறது. இந்த பூமியே நிலை தடுமாறப் போகின்றது, தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை.
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் உணர முடியும்.
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.

உலகில் அணுகுண்டுகள் வெடிக்கத் தொடங்கினால் கதிர் இயக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியிலே படாதபடி தடைப்படுத்தினால் பூமி பனிப்பாறையாக மாறிவிடும்.

இப்போது இருக்கும் பூமி தன் திசை மாறும்... நாம் எல்லாம் கடலுக்குள் போகும் நிலை வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது இருந்தே அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் தான் தப்ப முடியும்.