ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2022

யாம் உபதேசிக்கும் வழியில் செல்வதைக் “கடினம்…” என்று யாரும் எண்ணாதீர்கள்

 

கல்வி கற்றுக் கொண்ட ஒருவர் புதிதாக ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் என்றால்...
1.எந்தெந்த அளவில் சேர்த்து அந்தப் பொருளை உருவாக்கினால்
2.இயக்கச் சக்தி... இந்த இடம்… “இது வலுவை தாங்கக் கூடியது...” என்று உணர்கின்றார் விஞ்ஞானி
3.அதன் வழியில் தான் புதிய சாதனத்தை உருவாக்குகின்றார்கள்.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அவர் கற்றுணர்ந்ததை யார் அவரிடம் சீடராக வருகின்றாரோ அவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

முதலில் கல்வியைக் கற்பிக்கின்றார்கள். அவர் கற்றுணர்ந்த வழியிலேயே சீடருக்கும் காட்டப்படும்போது அதைக் கற்றுணர்ந்து வருகின்றார்.

கற்றுணர்ந்து அதன் வழிகளிலே வந்தாலும்… போதித்தவரின் வழியிலே சீராக அவர் செயல்படுவார்…! என்றால் அவர் அதில் வெற்றி பெறுகின்றார்.

ஆனால் கற்றுக் கொடுக்கப்படும் பொழுதே
1.“கடினம்...” என்று எண்ணி அந்தக் கல்வியை அவர் கற்க நேர்ந்தால்
2.அவர் எண்ணங்களிலும் கடுமை வந்துவிடும்
3.அவருடைய சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் இன்ஜினியராக வரும் நிலையில்… “எப்படியோ” பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்… அந்தப் பாட நிலைதான் அவருக்கு மீண்டும் மீண்டும் வரும். “மூலக்கூறுகளை அவர் அறிய முடியாது...”

ஆகவே அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

இதைப் போன்று யாம் கொடுக்கும் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். உங்கள் உணர்வுடன் இணைந்து விட்டால் அந்த உணர்வை நீங்கள் நுகரும் போது... அறிவின் ஞானமாக வருகின்றது.

அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்... அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது அதனதன் கருக்களாக உங்களுக்குள் உருவாகின்றது.

1.ஞானிகளைப் பற்றிய நினைவின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் உடலுக்குள் இருக்கும் ஊனுக்குள் இதைப் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவினை நினைவாக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது இந்த வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

யாம் பதிவாக்கியதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது வாழ்க்கையில் வரும் இருளை மாற்றச் செய்யும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

1.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை எப்போதுமே இணைத்துக் கொண்டு வந்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் மற்ற உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய நிலைகள் இன்னொரு பிறவியைத் தான் உருவாக்கும்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை…!