ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2022

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி... அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை... வேதனை... என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது... தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.