ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2022

நாம் இயங்கவில்லை... மற்றொன்று தான் நம்மை இயக்குகிறது - விளக்கம்

 

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகும் பாதையிலே ஒரு அழுத்தமான மிளகாய் நெடி காற்றிலே கலந்து வந்தால்
1.எவ்வளவு திறமையுள்ளவராக நாம் இருந்தாலும்
2.அதைச் சுவாசிக்கும் போது... அந்த நேரத்தில் நல்ல குணங்களை மாற்றிவிட்டு நம்மைத் தும்ம வைத்து விடுகின்றது
3.சிந்திக்கும் தன்மையை அந்த இடத்தில் இழக்கச் செய்துவிடுகிறது.

அது எலக்ட்ரானிக் ஆக மாறுகின்றது.

அதாவது... எதனுடைய உணர்வைச் சூரியனின் இயக்க அணுக்கள் (வெப்பம் காந்தம்) கவர்கின்றதோ அதை நாம் நுகரப்படும் போது அதனின் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்கி விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுதான நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

ஆனால் சில சந்தர்ப்பங்களில்...
1.ஒருவரைப் பார்த்தபின் இனம் புரியாது அவன் மேல் வெறுப்பு வரும்
2.இனம் புரியாத சோர்வு நமக்குள் வரும்
3.சும்மா பார்த்தாலே... இனம் தெரியாத சிந்தனைகளும் வரும்
4.ஏன்... எதற்கு...? நம் மனம் அப்படி மாறுகிறது...! என்று நிலை கூட வந்துவிடும்.

காரணம்... மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வின் தன்மை நம்மை அறியாது இயக்குவதை நாம் அறிய முடியவில்லை.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்கி அதிலே காந்தப் புலனையும் கெமிக்கலும் கலந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழைகளை உருவாக்குகின்றனர்.

1.தட்டும் போது மோதலின் அதிர்வின் ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு அது இயக்கி அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப
3.எதிர் நிலை வரும்போது எலக்ட்ரானிக் ஆக மாற்றி
4.எவ்வளவு பெரிய இயந்திரமாக இருந்தாலும் அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் நம் உடலான இந்த இயந்திரத்தை... நம்மை இயக்கிவிடுகின்றது. அதனால் இனம் புரியாது சோர்வடைந்து விடுகின்றோம்.

உதாரணமாக ஜோதிடம் ஜாதகம் பார்ப்போரெல்லாம் தன்னிடம் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து
1.ஒரு வார்த்தையை விட்டு அதற்கப்புறம் என்ன வருகிறது...? என்று பார்ப்பார்கள்...
2.நம்மிடமிருந்தே தெரிந்து கொள்வார்கள்.

அதை வைத்து... நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்...! என்று சொல்வார்கள் காரணம்... அதே குறிக்கோளாக இருப்பதால் அவர்களால் என்ன... ஏது..? என்று சொல்ல முடிகிறது.

ஆனாலும் மற்றவர்கள் குடும்பத்தில் நடந்த கஷ்டத்தை எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்ட பின் கடைசியில் அவரால் அவரைக் காக்க முடியாது. அவர் குடும்பத்தில் பார்த்தோமென்றால் பல தரித்திரங்களும் பல சங்கடங்களும் பல வெறுப்புகளும் தான் இருக்கும்.

வயிற்றுப் பிழைப்புக்காக ஜாதகம் பார்த்தாலும்...
1.பிறருடைய உணர்வின் அதிர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.பிறருக்கு ஜோதிடம் சொன்னாலும் இவர் வாழ்க்கை பாழாகிவிடும்.

அதே போல் தான் மந்திர ஒலிகளைச் சேர்த்துப் பிறரை இயக்கலாம். பின் இதுவும் பாழாகி உடலுக்குப்பின் பிறருடைய ஈர்ப்புக்கு அவர் ஜெபித்த மந்திரத்தால் ஈர்க்கப்பட்டு முதலிலே இவன் எதைச் செய்தானோ அங்கே போய் அதற்குத் தான் பயன்படும்.

இது எல்லாம் சாகாக்கலையாக... ஒரு உடலில் விளைந்தது மீண்டும் மீண்டும் அடுத்த உடலிலே சுற்றிக் கொண்டிருக்கும். கடைசியில் யானை தேய்ந்து கட்டெறும்பானது போன்று மனிதனல்லாத உடலாகத் தான் போக நேரிடும்.

ஆகவே மனித உடலிலே குறுகிய காலமே வாழுகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும். சிறிது காலமே வாழ்கின்றோம்... என்பதை
1.“நேரமாகி விட்டது...” என்று இராமன் மனதைக் குவித்தான் (மணலைக் குவித்து சிவலிங்கமாக்கிப் பூஜித்தான்) என்று இராமாயணத்தில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
2.வளர வளர உடலின் தரமும் குறைகின்றது... ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது...!
3.இதற்குள் நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலைப் பெற வேண்டும் என்றால் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்.

பகைமைகளை அகற்றி நம் பார்வையால் மற்றவர்களுக்கும் அந்தத் தீமைகள் அகலும் சக்தியாகச் செயல்பட வேண்டும்.

இந்த உலகில் இருளை ஒளியாக மாற்றி... விஷத்தை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாமும் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றும் நிலையாக ஏகாந்த நிலையாக வாழ முடியும்.