ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2022

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்... நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்...?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன...?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்... எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு... அந்நாடியை எழுதிய பெரியோரை... அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து... ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே...!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே... ஆண்டவனே...! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்...? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு...
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான் இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும் இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.